ஏமாற்றமான 2 வாரங்கள்.. கோலி, ரோகித் திரும்பி இருப்பது மூலம் புது பவர்- பயிற்சியாளர் மோர்க்கல்
ராஞ்சி: இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல், ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.இந்த 2 ஜாம்பவான்களும் வரும் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 30 அன்று ராஞ்சியில் தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்குகிறார்கள்.
கடின உழைப்பின் மூலம் தங்கள் உடற்தகுதியை பேணிக்காத்தால், தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா இணைந்து நடத்தும் உலகக் கோப்பையில் அவர்கள் இடம்பெறுவதற்கு எந்த தடையும் இல்லை என்று மோர்கல் தெரிவித்தார்.

ரோஹித் மற்றும் விராட்டை 2027 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதில் அளித்த மோர்க்கல், "நிச்சயமாக, அவர்கள் தரமான வீரர்கள். இருவரும் கடினமாக உழைத்து, தங்கள் உடற்தகுதியைப் பராமரிக்கும் வரை, உலகக் கோப்பையில் விளையாடலாம்."
"அந்த அனுபவத்தை வேறு எங்கும் பெற முடியாது என்று நான் எப்போதும் நம்புகிறேன். அவர்கள் பல கோப்பைகளை வென்றுள்ளனர். பெரிய போட்டிகளில் எப்படி விளையாட வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். நிச்சயமாக, அவர்கள் தங்கள் உடற்தகுதியைப் பராமரித்து, உடல் ரீதியாகத் தயாராக உணர்ந்தால் விளையாடலாம். உலகக் கோப்பை இன்னும் நீண்ட தூரம் உள்ளது."
"நான் கோலி, ரோகித்துக்கு எதிராக பல போட்டிகளில் விளையாடியுள்ளேன். அவர்களுக்கு பந்துவீசும் போது தூக்கமில்லாத இரவுகளாக எனக்கு இருந்தன. ஒரு பந்துவீச்சாளராக, அவர்களுக்கு எதிராக விளையாடும்போது என்ன மனநிலை இருக்கும் என்று எனக்குத் தெரியும்."
"கடந்த இரண்டு வாரங்கள் எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் சிந்திப்பதற்கு ஒரு சில நாட்கள் கிடைத்தன. வெள்ளைப் பந்து அணி மீது கவனம் செலுத்துவது முக்கியம். நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். விராட் மற்றும் ரோஹித் திரும்பியதால் புதிய பவர் கிடைத்துள்ளது. அடுத்த சில வாரங்கள் வெள்ளைப் பந்து கிரிக்கெட் விளையாட ஆவலுடன் இருக்கிறோம்."
"சுப்மன் கில்லும், ஸ்ரேயாஸ் ஐயரும் தற்போது நலமாக உள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு கில்லிடம் பேசினேன். அவர் நலமாக இருப்பதாக கூறினார். இதே போன்று ஸ்ரேயாஸ் ஐயரும், உடல்பயிற்சி செய்து வருகிறார். இருவரும் நலமாக இருக்கிறார்கள். அது தான் முக்கியம். இருவரும் விரைவில் அணிக்கு திரும்புவார்கள் என்று நம்புகிறேன்" என மோர்னே மோர்க்கல் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications