அகமதாபாத்: டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணியின் ரன் ரேட் அடி பாதாளத்திற்கு சென்றிருக்கிறது. தற்போது குரூப்-1 பிரிவில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவின் ரன் ரேட் மைனஸ் 3.80 என்று அளவில் உள்ளது. சூப்பர் 8 சுற்றில் மூன்று போட்டிகளில் ஒவ்வொரு அணிகளும் விளையாட வேண்டும். இதில் மூன்று போட்டிகளில் வெல்லும் அணி யாருடைய தயவும் இல்லாமல் அரை இறுதி சுற்றுக்கு செல்லும்.

குறைந்தபட்சம் இரண்டு போட்டிகள் ஆவது ஒரு அணி வெல்ல வேண்டும். தற்போது இந்திய அணி முதல் போட்டியிலே படுதோல்வியை தழுவி இருப்பதால் அடுத்த இரண்டு போட்டிகளுமே இந்தியாவுக்கு வாழ்வா சாவா என்ற கட்டத்தை எட்டி இருக்கிறது. அதுவும் ரன் ரேட் அடி பாதகத்தில் உள்ளதால், தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.
இந்திய அணிக்கு அடுத்ததாக வியாழன் அன்று பிப்ரவரி 26 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜிம்பாப்வே உடனும், மார்ச் ஒன்றாம் தேதி கொல்கத்தா ஈலன் கார்டன் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் எதிராகவும் விளையாடுகிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். குறிப்பாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
அப்போதுதான் ரன் ரேட் மேலே வரும். அது மட்டும் இல்லாமல் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் தென்னாப்பிரிக்க அணி சூப்பர் 8 சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும். இதன் மூலம் இரண்டாவது இடம் பிடிக்கும் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலை வரும்.
தற்போது இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி கிட்டத்தட்ட மிக நெருக்கடியான சூழலில் சிக்கி இருக்கிறது. ஜிம்பாவே போட்டியில் எவ்வாறு விளையாடப் போகிறார்கள் என்பதை பொறுத்தே இந்திய அணியின் எதிர்காலம் உள்ளது. இந்த இரண்டு போட்டிகளில் ஒரு போட்டிகளில் தோல்வியை தழுவினாலும், இந்திய அணி தொடரை விட்டு வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.