IND vs SA : இந்திய அணியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பார்த்தவுடன் கதிகலங்கிய தென்னாப்பிரிக்க அதிரடி வீரர்
ஜோஹன்னஸ்பெர்க் : தென்னாப்பிரிக்க அணியை பந்துவீச்சில் வீழ்த்த இந்திய அணி போட்ட திட்டம் பெரிய அளவில் பலன் அளித்தது.
முதல் ஓவரிலேயே தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி துவக்க வீரர் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் இந்திய அணியின் திட்டத்தை கண்டு கடும் அழுத்தத்தில் சிக்கினார். தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் வீழ்ச்சி துவங்கவே அதுதான் காரணம். என்ன நடந்தது?
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே நடந்த டி20 தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து இருந்தது. அந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் தென்னாப்பிரிக்க அணியின் துவக்க வீரர்கள் ரீஸா ஹென்ரிக்ஸ் மற்றும் மேத்யூ ப்ரீட்ஸ்கே ஆடிய அதிரடி ஆட்டம் தான்.

இரண்டாவது டி20 போட்டியில் அவர்கள் இருவரும் முதல் இரண்டு ஓவர்களில் 30 ரன்களுக்கும் மேல் சேர்த்து இந்தியா அணிக்கு கடும் அழுத்தம் கொடுத்தனர். அந்த தவறு மூன்றாவது டி20 போட்டியில் நடந்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்த இந்திய அணி முதல் ஓவரிலேயே அதற்கான திட்டத்தை வகுத்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 201 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்க அணிக்கு 202 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்த நிலையில், தன் திட்டத்தை செயல்படுத்தியது.
அதன்படி முகமது சிராஜ் முதல் ஓவரில் அவுட் சைடு ஆஃப் திசையில் பந்து வீச வேண்டும். இரண்டு அல்லது மூன்று ஸ்லிப் ஃபீல்டர்களை நிறுத்தி அவர் பந்தை அடிக்க முயன்று எட்ஜ் கொடுத்தால் ஸ்லிப் ஃபீல்டிங்கில் கேட்ச் பிடிக்க வேண்டும். ஒரு வேளை அவர்கள் கேட்ச் கொடுக்கவில்லை என்றாலும் பவுண்டரி அடிக்க பயப்படுவார்கள். அதன் மூலம் முதல் சில ஓவர்களில் ரன் குவிப்பை கட்டுப்படுத்தலாம் என்பதே இந்திய அணியின் திட்டம்.
அதன்படி முதல் ஓவரில் சிராஜ் அவுட்சைடு திசையில் பந்து வீசினார். ஸ்லிப் ஃபீல்டர்கள் இருந்ததால் அவர் பந்துகளை அடிக்கவே தடுமாறினார். முதல் ஓவரில் ரன் எடுக்காமல் போகவே அது மெய்டன் ஓவராக மாறியது. அதனால் இரண்டாவது ஓவரில் ரன் குவித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளான மற்றொரு துவக்க வீரர் மேத்யூ பிரீட்ஸ்கே, முகேஷ் குமார் பந்துவீச்சில் பவுல்டு அவுட் ஆனார்.
அதன் பின் மூன்றாவது ஓவரில் சிராஜ் பந்துவீச்சில் 8 ரன்கள் எடுத்த ஹென்ரிக்ஸ் அப்போதும் ஸ்ட்ரைக் ரேட் நூறுக்கும் கீழ் இருந்ததால் பதற்றத்தில் இருந்தார். நான்காவது ஓவரில் சிங்கிள் ரன் ஓடுவதில் தவறு செய்து ரன் அவுட் ஆனார். ஆக, இந்திய அணியின் திட்டம் சரியாக வேலை செய்து தென்னாப்பிரிக்க அணிக்கு கடும் அழுத்தத்தை கொடுத்து ஆபத்தான இரண்டு துவக்க வீரர்கள் விக்கெட்டையும் பெற்றுக் கொடுத்தது.
அதன் பின் சரிந்த தென்னாப்பிரிக்க அணி 95 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. வேகப் பந்துவீச்சாளர்கள் தங்கள் வேலையை முடித்த உடன் சுழற் பந்துவீச்சாளர்கள் ஜடேஜா 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர். இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.


Click it and Unblock the Notifications