கொல்கத்தா: முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் அடைந்த தோல்வி, இந்தியக் கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது. குறிப்பாக, தென் ஆப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறியது, அணி நிர்வாகத்திற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இந்தச் சரிவிலிருந்து மீண்டு, கவுஹாத்தியில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்டில் பதிலடி கொடுக்கும் முனைப்பில், இந்திய அணி ஒரு ரகசிய ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை கொல்கத்தாவில் நடந்த விருப்ப வலைப்பயிற்சி அமர்வின் போது, இந்திய பேட்ஸ்மேன்களுக்குப் பயிற்சி அளிக்க, ஒரு அபூர்வத் திறமை கொண்ட பந்துவீச்சாளர் வரவழைக்கப்பட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்குச் சிம்மசொப்பனமாக விளங்கிய வலது கை ஆஃப்-ஸ்பின்னர் சைமன் ஹார்மர் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மஹாராஜ் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள, ஒரு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கௌஷிக் மைத்தி என்ற இரு கைகளாலும் பந்துவீசக்கூடிய அபூர்வ திறமை கொண்ட இளம் வீரர், வலைப்பயிற்சிக்காக அழைக்கப்பட்டார். 26 வயதான இவர், சையத் முஷ்டாக் அலி டிராபியில் வங்காள அணிக்காக விளையாடியுள்ளார் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான ஐபிஎல் இளம் வீரர்கள் சோதனை முகாமிலும் பங்கேற்றுள்ளார்.
இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேன்களான சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோருக்கு, கௌஷிக் மைத்தி தனது வலது கையால் ஆஃப்-பிரேக் பந்துகளை வீசினார். இது, சைமன் ஹார்மரின் பந்துவீச்சை எதிர்கொள்ளும் ஒரு பயிற்சியாக அமைந்தது.
பயிற்சியில் பங்கேற்ற ஒரே வலது கை பேட்ஸ்மேனான துருவ் ஜுரெலுக்கு, அவர் தனது இடது கையால் சுழற்பந்து வீசினார். இது கேஷவ் மஹாராஜின் பந்துவீச்சு பாணியை ஒத்திருந்தது. இதன் மூலம், ஒரே பந்துவீச்சாளரை வைத்து இருவேறு ஸ்பின்னர்களை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் பயிற்சி செய்தனர்.
இந்த அனுபவம் குறித்துப் பேசிய கௌஷிக் மைத்தி, "இது எனக்கு ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. இந்திய வீரர்கள் யாரும் என்னிடம் குறிப்பிட்ட முறையில் பந்துவீசுமாறு கேட்கவில்லை. நான் எனது இயல்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினேன்" என்றார்.
மேலும், ரவீந்திர ஜடேஜாவுக்குப் பந்துவீசியது தனது கனவு நனவான தருணம் என்று குறிப்பிட்ட அவர், ஜடேஜா தனக்கு சிறந்த ஆலோசனையை வழங்கியதாகவும் தெரிவித்தார். "எனக்குப் பந்துவீசிய பிறகு ஜட்டு பாய் (ரவீந்திர ஜடேஜா), எனது இயல்பான பந்துவீச்சு நீளம் 4 முதல் 5 மீட்டரில் இருப்பதாகக் கவனித்தார். அவர், எனது நீளத்தை ஒரு மீட்டர் பின்னுக்குத் தள்ளி (6 முதல் 7 மீட்டர்) இன்னும் வேகமாக வீசும்படி கூறினார். அப்படிச் செய்தால், பேட்ஸ்மேன்களுக்கு எதிர்வினையாற்ற மிகக் குறைந்த நேரமே கிடைக்கும் என்றும் விளக்கினார்" என்று மைத்தி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ஆகியோர் தனக்கு எந்த அறிவுறுத்தல்களையும் வழங்கவில்லை என்றும், தனது இயல்பான திறமையை வெளிப்படுத்தவே அவர்கள் விரும்பியதாகவும் மைத்தி குறிப்பிட்டார்.
முதல் டெஸ்டில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராகத் தடுமாறிய இந்திய அணி, இரண்டாவது டெஸ்டுக்குத் தயாராவதற்கு இது போன்ற சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டு வருவது பலன் அளிக்குமா? என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.