மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் தடுமாறியது பல்வேறு விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அணில் கும்ப்ளே, பயிற்சியாளர் கம்பீர் செய்த சில தவறுகள் தான் இந்திய அணியின் பேட்டிங் தடுமாறுவதற்கு காரணம் என்று கூறியிருக்கின்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கடந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர், டாப் ஆர்டரின் மூன்றாவது வரிசையில் விளையாடினார். ஆனால் தற்போது நம்பர் எட்டாவது இடத்தில் விளையாடுகிறார். எனக்கு தெரிந்து அவருடைய சரியான பேட்டிங் வரிசை ஏழாவது இடமாக இருக்கும்.

ஆனால் கம்பீர் வந்த பிறகு இந்திய வீரர்களுக்கு தான் எந்த இடத்தில் களமிறங்க போகிறோம் என்ற விவரமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டது. ஏழாவது இடத்தில் விளையாடினால் நிச்சயம் வாஷிங்டன் சுந்தர் எதிரணிக்கு சிக்கலை கொடுப்பார். இன்றைய ஆட்டத்தில் கூட அவர் தன்னுடைய தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
களத்தில் நின்று பார்ட்னர்ஷிப் அமைத்தார். வாஷிங்டன் சுந்தரும் குல்தீப் ஆடிய விதத்தைப் பார்த்துதான் தெம்பா பவுமா ஃபாலோவ் ஆன் கொடுக்காமல் இருந்திருப்பார் என்று நான் நினைக்கின்றேன். குல்தீப் யாதவ் மட்டும் விரைவாக ஆட்டம் இழந்து இருந்தால், இந்நேரம் இந்திய அணி பாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிக் கொண்டிருக்கும்.
நான் இன்னொரு ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகின்றேன். கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாக நாம் இந்திய அணியில் உள்ள டாப் ஆர்டர் வீரர்கள் பலர் ஓய்வு பெற்றதை பார்த்திருக்கின்றோம். சிலர் அணியின் தேர்வு செய்யப்படுவது கிடையாது. கில் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் மாறிவிட்டார்கள்.
தற்போதைய பேட்டிங் வரிசையில் கில்லும் இல்லை. இந்தியா இந்த போட்டியில் கில்லை கேப்டனாக மிஸ் செய்ததோ இல்லையோ, ஒரு பேட்ஸ்மேனாக நிச்சயம் மிஸ் செய்திருக்கும். இப்படி பேட்டிங் வரிசை நிலையற்ற தன்மையில் இருந்தால் நிச்சயம் அது எதிரணிக்கு தான் வாய்ப்பாக மாறும். சில வீரர்கள் சரியாக விளையாடாமல் இருக்கலாம். அவர்களுக்கு குறைந்தது ஆறு முதல் எட்டு போட்டிகள் ஆவது தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும்.
சிலர் 10 ,12 போட்டிகளுக்கு பிறகு நன்றாக விளையாட தொடங்குவார்கள். ஆனால் கடந்த சில போட்டிகளாக பேட்டிங் ஆர்டர் மாற்றப்பட்டு வருகிறது. இப்படி அடிக்கடி பேட்டிங் வரிசையை மாற்றினால் வீரர்கள் குழம்பிவிடுவார்கள். நாம் எந்த இடத்தில் பேட்டிங் செய்யப் போகிறோம்? நாம் எப்படி விளையாட வேண்டும் என்ற குழப்பம் வீரர்களுக்கு ஏற்பட்டுவிடும்.
உதாரணத்திற்கு கருண் நாயர் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் இங்கிலாந்து தொடரில் திடீரென்று நடு வரிசையிலும் அடுத்தது மூன்றாவது வீரராகவும் களம் இறக்கப்பட்டார். திடீரென்று காரணமே இல்லாமல் அவரை ஒரு போட்டியில் அணியை விட்டு நீக்கினார்கள். பின் மீண்டும் அணியில் சேர்த்தார்கள். இப்படி அடிக்கடி மாற்றினால் வீரர்களுக்கு குழப்பம் தான் ஏற்படும் என அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.