டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணி, அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு அணிகளும் மூன்று போட்டிகளில் விளையாட வேண்டும். இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி, அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும். இந்த நிலையில் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய அந்த அணியின் அதிரடி வீரர் குயிண்டன் டி காக் 6 ரன்களிலும், ஏய்டன் மார்க்கரம் 4 ரன்களிலும் ரியான் ரிக்கல்டன் 7 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 20 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த சூழலில் நடு வரிசையில் விளையாடிய சிஎஸ்கே வீரர் டிவால்ட் பிரவீஸ் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் அதிரடி காட்டி ரன்களை சேர்த்தனர்.
இதில் பிரவீஸ் 29 பந்துகளில் 45 ரன்கள் சேர்க்க டேவிட் மில்லர் 35 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இதைப் போன்று கடைசி வரை ஆட்டமிழக்காமல் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் 24 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக 20 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.
ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே இசான் கிசன் டக் அவுட் ஆக, திலக் வர்மா ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக இந்திய அணி 5 ரன்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த சூழலில் அபிஷேக் ஷர்மா இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என 15 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டம் இழந்தார்.
இந்திய அணி சரிவை நோக்கி செல்ல கேப்டன் சூரியகுமார் மெதுவாக விளையாடி 22 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். இதேபோன்று வாஷிங்டன் சுந்தர் 11 ரன்கள் எடுக்க ஹர்திக் பாண்டியா 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க ரிங்கு சிங் டக்அவுட் ஆகியும் , ஆர்ஸ்தீப் சிங் 1 ரன்னிலும் திரும்பினர். சிவம் துபே மட்டும் களத்தில் தனி ஆளாக நின்று பேட்டிங் செய்து, 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 111 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது.