சண்டிகர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆனால் தோல்வியை விட, போட்டியின் கடைசி நேரத்தில் இந்திய அணி விக்கெட்டுகளைத் தாரைவார்த்த விதம் ரசிகர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. வெறும் 5 ரன்கள் சேர்ப்பதற்குள் கடைசி 5 விக்கெட்டுகளை இழந்து, ஒரு தெருவோர கிரிக்கெட் அணி போல இந்திய அணி சுருண்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
நியூ சண்டிகரில் நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 214 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்தியா, 19.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தொடர் 1-1 என சமனானது.

இந்திய அணி ஒரு கட்டத்தில் 17.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றி கடினம் என்றாலும், கௌரவமான தோல்வியையாவது சந்திக்கலாம் என்ற நிலை இருந்தது. கடைசி 2 ஓவர்களில் 20 முதல் 30 ரன்கள் எடுத்து இருக்கலாம். ஆனால், அப்போது நடந்தவை அனைத்தும் மோசமாக இருந்தது.
அப்போது வரிசையாக கடைசி 5 விக்கெட்கள் வீழ்ந்தன. இதில் மூன்று பேர் பேட்ஸ்மேன்கள், இருவர் மட்டுமே அதிகம் பேட்டிங் செய்யத் தெரியாத பந்துவீச்சாளர்கள். இந்திய அணி 157 ரன் எடுத்து இருந்த போது ஜித்தேஷ் சர்மா 27 ரன் எடுத்து அவுட் ஆனார். 158 ரன்னில் சிவம் துபே 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து 162 ரன்னில் அர்ஷ்தீப் சிங் 4 ரன் எடுத்து அவுட் ஆனார். 162 ரன்னில் வருண் சக்கரவர்த்தி டக் அவுட் ஆனார். அதே 162 ரன்னில் அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 62 ரன்கள் குவித்த திலக் வர்மாவும் ஆட்டமிழந்தார். மொத்தத்தில் 157 முதல் 162 ரன்கள் எடுப்பதற்குள், அதாவது கடைசி 5 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை (ஜித்தேஷ், துபே, அர்ஷ்தீப், வருண், திலக்) இந்தியா பறிகொடுத்தது. ஒட்னியல் பார்ட்மேன் வீசிய ஓவரில் இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக பெவிலியன் திரும்பினர்.
முன்னதாக, டாப் ஆர்டர் சரிந்த நிலையில் திலக் வர்மா தனி ஆளாகப் போராடினார். 34 பந்துகளில் 62 ரன்கள் (2 பவுண்டரி, 5 சிக்ஸர்) விளாசினார். ஆனால் அவருக்கு மறுமுனையில் சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஹர்திக் பாண்டியா (23 பந்துகளில் 20 ரன்கள்) மற்றும் அக்சர் படேல் (21 பந்துகளில் 21 ரன்கள்) ஆகியோர் பந்துகளை வீணடித்து நெருக்கடியை அதிகரித்தனர்.
முன்னதாக பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, டி காக் (90), ஃபெரீரா (30*), மில்லர் (20*) ஆகியோரின் அதிரடியால் 213 ரன்கள் குவித்தது. இந்திய பந்துவீச்சில் அர்ஷ்தீப் (54 ரன்கள்), பும்ரா (45 ரன்கள்) வாரி வழங்கியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.