குழப்பத்தில் இந்தியா
இனி இந்தியா நான்காம் நாளில் இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடிய பின்னரே தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங் ஆட அழைக்கும் என விமர்சகர்கள் கருத்து கூறி உள்ளனர். நிச்சயம் இந்திய அணி மூன்றாம் நாள் இறுதியில் குழப்பத்தில் தான் இருக்கும்.
முதல் இன்னிங்க்ஸ் அபாரம்
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 601 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அதனால், இந்தியா இந்தப் போட்டியில் இன்னிங்க்ஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டது.
விக்கெட்களை அள்ளியது
அதே போல இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியின் முதல் இன்னிங்க்ஸில் விக்கெட்களை விரைவாக அள்ளியது. 53 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த அந்த அணிக்கு கேப்டன் டு ப்ளேசிஸ் 64, டி காக் 31 ரன்கள் கொடுத்து ஆறுதல் அளித்தனர்.
என்ன எதிர்பார்ப்பு?
எனினும், 162 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது அந்த அணி. அடுத்த இரண்டு விக்கெட்களை விரைவில் வீழ்த்தினால், இந்தியா நிச்சயம் பாலோ ஆன் கொடுத்து தென்னாப்பிரிக்க அணியை தொடர்ந்து இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆட வைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
கடின வேலை கொடுத்த இருவர்
அப்போது ஜோடி சேர்ந்த தென்னாப்பிரிக்காவின் பிலாண்டர் - கேஷவ் மகாராஜ் இந்திய அணியை சோதித்தனர். 8 விக்கெட்களை வீழ்த்திய இந்திய அணிக்கு இவர்கள் இருவரையும் பிரிப்பது கடினமான வேலையாக மாறியது.
பிலாண்டர் வீணடித்தார்
பிலாண்டர் ரன்னே அடிக்காமல் போனாலும் பரவாயில்லை என பந்துகளை வீணடித்தார். 192 பந்துகளை சந்தித்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 44 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.
கேஷவ் மகாராஜ் அரைசதம்
கேஷவ் மகாராஜ் சுழற் பந்துவீச்சை சமாளித்து பேட்டிங் செய்ய நேற்றே பயிற்சி எடுத்துக் கொண்டாராம். அவர் 132 பந்துகளை சந்தித்து 72 ரன்கள் குவித்தார். பின்னர் அஸ்வின் பந்து வீச்சில் மகாராஜ் ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்க்ஸில் 275 ரன்கள் குவித்தது.
47 ஓவர்கள் காலி
கடைசி இரண்டு விக்கெட்களை வீழ்த்த மட்டுமே இந்தியா 47 ஓவர்களை எடுத்துக் கொண்டது. மேலும், தென்னாப்பிரிக்கா 200 ரன்களுக்குள் வீழ்ந்தால் இந்தியா 400 ரன்கள் முன்னிலை பெறும். அப்போது பாலோ ஆன் கொடுத்தால் இந்தியா எளிதாக வெற்றி பெறும் என கருதப்பட்டது.
சிக்கலான நிலை
தற்போது 326 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது இந்தியா. மேலும், 47 ஓவர்கள் இழப்பால் இரண்டு நாட்கள் மட்டுமே மீதமுள்ளது. இது பாலோ ஆன் செய்ய சிக்கலான நிலை. காரணம், இந்திய வீரர்கள் பவுலிங் போட்டும், பீல்டிங் செய்தும் சோர்ந்து போய் உள்ளனர். மீண்டும் ஒரு இன்னிங்க்ஸ் பந்து வீசினால் அனைவரும் சோர்ந்து விட வாய்ப்பு உள்ளது.
இந்தியா பேட்டிங் ஆடும்
மேலும், 326 ரன்கள் இலக்கை தென்னாப்பிரிக்கா தாண்டவும் வாய்ப்பு உள்ளது. அதனால், நான்காம் நாள் பேட்டிங் ஆடி இந்தியா கூடுதலாக 150 - 200 ரன்கள் சேர்த்த பின் தென்னாப்பிரிக்க அணிக்கு 450 ரன்களுக்கும் மேல் இலக்கு நிர்ணயித்து பேட்டிங் செய்ய அழைக்கும் என கூறப்படுகிறது. 2 விக்கெட்களை விரைவாக வீழ்த்தாமல் இந்தியா தனக்கு தானே சிக்கலை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.