பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் இருவரும் 2வது ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேறி இருப்பது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கேசவ் மஹாராஜ் வீசிய 2வது ஓவரில் இந்திய அணி அவசரத்தால் ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். பார்படாஸ் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்ததாக பார்க்கப்பட்டது.

இதன்பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் மார்கோ யான்சன் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரில் விராட் கோலி மைதானத்தில் 3 திசைகளிலும் பவுண்டரி அடித்து அசத்த, இந்திய அணி 15 ரன்களை குவித்தது. இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி முதல் ஓவரில் 15 ரன்களை குவிப்பது இதுவே முதல்முறையாகும்.
இதன்பின் 2வது ஓவரை வீச சுழற்பந்துவீச்சாளரான கேசவ் மஹாராஜ் அழைக்கப்பட்டார். மஹாராஜ் ஏற்கனவே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு அச்சுறுத்தல் கொடுத்துள்ளார். இதன்பின் மஹாராஜ் வீசிய முதல் 2 பந்துகளில் ரோகித் சர்மா 2 பவுண்டரிகளை விளாசி அசத்தினார். இதனால் ரோகித் சர்மா ஃபார்மை தொடர்வதாக பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த ஓவரின் 4வது பந்தை மஹாராஜ் கொஞ்சம் ஒய்டாக வீச, ஃபீல்டிங்கை கணித்து ரோகித் சர்மா ஸ்வீப் ஷாட் ஆடினார். அது நேராக கிளாசன் கைகளில் சென்று விழுந்தது. இதனால் ரோகித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ரிஷப் பண்ட் மீண்டும் ஸ்வீப் ஷாட் ஆடினார். அந்த பந்து வேகம் குறைவாக வந்ததை கணிக்காத ரிஷப் பண்ட், பேட்டை வேகமாக வீசினார்.
அது ரிஷப் பண்ட் பேட்டின் மேல் பகுதியில் அடித்து எட்ஜாகி விக்கெட் கீப்பர் டி காக் கைகளில் கேட்சானது. இதனால் ரிஷப் பண்ட் டக் அவுட்டாகி வெளியேற, இந்திய அணி 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்ததால், இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.