தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து இருபதாவது முறையாக டாஸ் இழந்து இருக்கிறது. இதன் மூலம் ராய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பவுமா, ஆடுகளம் பார்த்தவுடனே எவ்வாறு செயல்படும் என்பதை கணிக்க கடுமையாக இருக்கின்றது. ஆனால் இந்த ஆடுகளம் கொஞ்சம் காய்ந்த நிலையில் இருக்கின்றது.

மாலை நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். இதன் மூலம் இரவு நேரத்தில் பேட்டிங் செய்வது சுலபமாக மாறிவிடுகிறது. கடந்த போட்டியில் நாங்கள் நல்ல முறையில் தொடக்கினோம். விக்கெட்டுகளை இழந்த பின்பும் நாங்கள் போராடிய விதம் எங்கள் அணியில் உள்ள நம்பிக்கையை காட்டுகிறது.
நாங்கள் கடந்த போட்டியில் செய்த தவறை திருத்திக்கொள்ள விரும்புகின்றோம். இன்றைய அணியில் நாங்கள் மூன்று மாற்றங்களை செய்திருக்கின்றோம். நான் மற்றும் கேசவ் மகராஜ், லுங்கி நிகிடி ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.
இந்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த தொடரை சமன் செய்ய நாங்கள் முயற்சி செய்வோம் என்று பவுமா கூறினார். இதனை தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் ராகுல், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் டாஸ் தான் எங்களுக்கு மிகவும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.
டாசை வெல்ல நாங்கள் முயற்சி செய்கின்றோம். இதற்காக நான் எடுத்த பயிற்சி கூட பலன் அளிக்கவில்லை .கடந்த போட்டியில் நிறைய நல்ல விஷயங்கள் நடந்தது. இந்த போட்டியில் நாங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை புரிந்து கொண்டிருக்கின்றோம். வீரர்கள் அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார்கள்.
பனிப்பொழிவு என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் எங்கு விளையாடினாலும் இதை நாம் எதிர்பார்க்கலாம். இதற்காக பௌலர்கள் ஸ்பெஷல் பயிற்சியை எடுத்திருக்கிறார்கள். பனிப் பொழிவில் எப்படி பந்து வீச வேண்டும் என்பது குறித்து பேசி இருக்கின்றோம். கடந்த போட்டி எங்களுக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்து இருக்கின்றது. இந்த போட்டியில் நாங்கள் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று ராகுல் கூறியுள்ளார்.