மும்பை: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் நட்சத்திர வீரரும் கேப்டனுமான கில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ரிஷப் பண்ட், தற்காலிக கேப்டனாக செயல்படுவார்.
இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் சேர்க்கப்படாமல் இந்திய வீரர்கள் நான்கு ஸ்பின்னர்கள் வைத்து விளையாடினார்கள். தற்போது கில் இடம் பெறாததால் சாய் சுதர்சனுக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சபாகரீம், கில் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு தான்.ஆனால் தற்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் சாய் சுதர்சன் மட்டுமல்ல, தேவுதட் படிக்கலுக்கு கூட இந்திய அணியில் இடம் கிடைக்கும். இந்திய அணி 6 பேட்ஸ்மேன்கள், ஐந்து பௌலர்கள் என்ற ஃபார்முலாவை பயன்படுத்தும் என்று நினைக்கின்றேன்.
இதில் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள், மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் நிச்சயம் இருப்பார்கள். இந்த அணி கௌஹாத்தி டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற வகையில் இருக்கும். என்னுடைய அணியில் அக்சர் பட்டேலுக்கு இடம் கிடையாது. ஏனென்றால் டெஸ்ட் அணியில் எப்போதுமே விதவிதமான பவுலர்கள் வேண்டும்.
உங்களுக்கு ஏற்கனவே ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இருக்கிறார்கள். அதை தவிர இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அப்படி இருக்கும் போது இந்தியா தங்களுடைய பேட்டிங் படையை சரியாக தேர்வு செய்து கொள்ள வேண்டும். இந்திய அணியில் ஏற்கனவே பல இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
இந்த தருணத்தில் துருவ் ஜூரலை நாம் பேட்டியில் முன்கூட்டியே களமிறக்க வேண்டும். இதன் மூலம் வலது கை, இடது கை காம்பினேஷனை நாம் பின்பற்ற முடியும் என்று சபாகரீம் தெரிவித்துள்ளார். கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் அக்சர் பட்டேல் இரண்டு இன்னிங்ஸ்களும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்திய நிலையில் கடைசி இன்னிங்சில் இந்திய அணி வெற்றிக்காக தனி ஆளாக போராடி 17 பந்தில் 26 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.