மும்பை: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது.
அண்மையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் எதிரான தொடரில் இந்தியா இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்றிருக்கிறது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 61.90 சதவீதம் பெற்று இந்தியா மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் முதல் இரண்டு இடங்களை பிடிக்க வேண்டியது அவசியம். இதனால் சொந்த மண்ணில் நடைபெறும் தென்னாப்பிரிக்க தொடரை இந்தியா இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்றால் மட்டுமே அது சாத்தியமாகும்.
முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி கவுஹாத்தியிலும் நடைபெறுகிறது. 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு தென்னாப்பிரிக்க அணி இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கின்றது. தென் ஆப்பிரிக்க அணி கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.
இதில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் அந்த அணி தொடரை சமன் செய்வது. இதன் மூலம் தென்னாபிரிக்க அணி 50 சதவீதம் வெற்றி சதவீதத்துடன் நான்காம் இடத்தில் உள்ளது. புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா அணி 100% வெற்றியுடன் முதலிடத்திலும், இலங்கை அணி 66.67 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இந்தியாவுக்கு இன்னும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் ஐந்து டெஸ்ட் மற்றும் இலங்கை நியூசிலாந்துக்கு அந்நிய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் எஞ்சி இருக்கிறது. இதில் இந்திய அணி முதல் இரண்டு இடங்களை பிடிக்க வேண்டும் என்றால் சொந்த மண்ணில் நடைபெறும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அது சாத்தியமாக மாறும். நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இந்திய அணியின் கேப்டன் கில் 946 ரன்கள் உடனும், இந்திய பவுலர் முகமது சிராஜ் 33 விக்கெட்டுகளை வீழ்த்தியும் இருக்கிறார்கள்.