டர்பன்: தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர்களான கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தி இந்திய அணியின் வருண் சக்கரவர்த்தி அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த வருண் சக்கரவர்த்தி, 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணி எளிதாக வெற்றி பெறும் என்று கருதப்பட்டது. ஆனால் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மிகச்சிறப்பாக பவுலிங் செய்து அசத்தியுள்ளார்.

பவர் பிளேவின் கடைசி ஓவரில் அட்டாக்கில் கொண்டு வரப்பட்ட வருண் சக்கரவர்த்தி, 2வது பந்திலேயே மார்க்ரம் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் வருண் சக்கரவர்த்தியின் பவுலிங்கில் மார்க்ரம் 3வது முறையாக ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். இதன்பின் 8வது ஓவரை வீச மீண்டும் வந்த போது, தொடக்க வீரர் ஹென்ரிக்ஸை 24 ரன்களில் வீழ்த்தி விக்கெட்டை கைப்பற்றினார்.
வருண் சக்கரவர்த்தியின் பவுலிங்கால் மிரண்டு போன தென்னாப்பிரிக்கா அணி கிளாசனை பதுக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இதனால் நம்பர் 5ல் ஆல்ரவுண்டர் யான்சன் களமிறங்கினார். இதனால் கிளாசனுக்காக இந்திய அணியும் வருண் சக்கரவர்த்தியை பதுக்கியது. ரவி பிஷ்னாய் மற்றும் அக்சர் படேல் பவுலிங் செய்த அடுத்த 2 ஓவர்களிலும் யான்சன் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.
இதனால் வேறு வழியின்றி மீண்டும் வருண் சக்கரவர்த்தி அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அந்த ஓவரின் 5வது பந்தில் யான்சன் 7 ரன்களில் போல்டாகி வெளியேற, ரசிகர்கள் எதிர்பார்த்த வருண் சக்கரவர்த்தி vs கிளாசன் இடையிலான யுத்தம் தொடங்கியது. அப்போது வருண் சக்கரவர்த்தி 3 ஓவர்களில் 16 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதனால் ஒரேயொரு ஓவர் மட்டுமே வருண் சக்கரவர்த்திக்கு இருந்தது.
அப்போது 13வது ஓவரை வீசுவதற்கு மீண்டும் வருண் சக்கரவர்த்தி வந்தார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே கிளாசன் லாங் ஆஃபில் சிக்சர் அடிக்க முயற்சித்து பேட்டை வீசினார். அந்த பந்து நேராக லாங் ஆஃப் திசையில் நின்ற ரிங்கு சிங்கின் கைகளில் சென்று விழுந்தது. இதனால் கிளாசன் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதுமட்டுமல்லாமல் கிளாசனுக்கு எதிராக நேருக்கு நேர் 6 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள வருண் சக்கரவர்த்தி 3வது முறையாக விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
தொடர்ந்து அடுத்த பந்திலேயே டேவிட் மில்லரும் டக் அவுட்டாகி வெளியேற, அந்த மைதானமே அதிர்ச்சியை வெளிப்படுத்தியது. இதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வருண் சக்கரவர்த்தி சாதனை படைத்துள்ளார். சிறப்பாக பவுலிங் செய்த வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 13 டாட் பால்கள் உட்பட 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.