டர்பன்: இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெறுவதற்கு 125 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடைசி வரை களத்தில் இருந்த ஹர்திக் பாண்டியா 45 பந்துகளில் 39 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. பின்னர் இந்திய அணி தரப்பில் சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. யான்சன் வீசிய முதல் ஓவரிலேயே சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகி வெளியேறினார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் அபிஷேக் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 5 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் கேப்டன் சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா கூட்டணி இணைந்தது. இருவருமே நிதானமாக ரன்கள் சேர்த்த நிலையில், தென்னாப்பிரிக்கா பவுலர்கள் டாஸ் பால்களாக வீசி பரபரப்பை அதிகப்படுத்தினர்.
அதற்கேற்ப ரன்கள் அடிக்க வேண்டும் என்ற வேகத்தில் சூர்யகுமார் யாதவ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் உடனடியாக அக்சர் படேல் களமிறங்க நிதானமாக ரன்களை சேர்த்தார். இதனால் இந்திய அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 34 ரன்களை சேர்த்திருந்தது. அதேபோல் திலக் வர்மாவும் பவுண்டரி அடிக்க முடியாமல் திணறினார்.
அப்போது பவுலிங் செய்த மார்க்ரமை அட்டாக் செய்ய முயன்று மில்லரின் அற்புதமான கேட்ச்-சால் 20 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து அக்சர் படேல் - ஹர்திக் பாண்டியா கூட்டணி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த போராடியது. ஆனால் தென்னாப்பிரிக்கா பக்கம் அதிர்ஷ்டம் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.
ஏனென்றால் ஹர்திக் பாண்டியா அடித்த பந்து பவுலரின் கைகளில் பட்டு, ஸ்டம்பில் அடிக்க அக்சர் படேல் 27 ரன்களில் ரன் அவுட்டாகினார். பின்னர் வந்த ரிங்கு சிங்கும் 11 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து வெளியேற, இந்திய அணி 87 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தென்னாப்பிரிக்கா அணியின் இரு ஸ்பின்னர்களும் சிறப்பாக பவுலிங் செய்து ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்திருந்தனார்.
பின்னர் ஹர்திக் - அர்ஷ்தீப் சிங் இணைந்து அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். 18 ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்களாக இருந்தது. 19வது ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா கொடுத்த 2 கேட்ச் வாய்ப்பையும் ஃபீல்டர்கள் கோட்டைவிட்டனர். இந்த ஓவரில் 6 ரன்கள் சேர்க்கப்பட, இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்கள் சேர்த்தது. கடைசி வரை களத்தில் இருந்த ஹர்திக் பாண்டியா 45 பந்துகளில் 39 ரன்களை சேர்த்தார்.