ஜொகன்னஸ்பெர்க்: இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற 202 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 29 ரன்கள் சேர்த்த நிலையில், சுப்மன் கில் 12 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த திலக் வர்மா டக் அவுட்டாகி வெளியேற, யஷஸ்வி ஜெய்ஸ்வால் - சூர்யகுமார் யாதவ் கூட்டணி இணைந்தது. இதில் ஜெய்ஸ்வால் அதிரடியாக பவுண்டரிகளை விளாசி அசத்த, சூர்யகுமார் யாதவ் நிதானமாக ரன்களை சேர்த்தார். இதன் மூலம் 6 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 62 ரன்கள் சேர்த்தது.
இதன்பின் சூர்யகுமார் யாதவும் அதிரடியில் களமிறங்க, இந்திய அணியின் ஸ்கோர் எகிறியது. சிறப்பாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் அரைசதம் அடிக்க, தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 32 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். 3வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த நிலையில், ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் சூர்யகுமார் யாதவ் விஸ்வரூபம் எடுக்க, ஒவ்வொரு ஓவரிலும் சிக்சர் பவுண்டரி என்று விளாசி தள்ளினார். பர்கர் விளாசிய 16வது ஓவரில் 17 ரன்களை விளாசப்பட்ட நிலையில், 18வது ஓவரில் 13 ரன்கள் விளாசப்பட்டது. இதனிடையே 19வது ஓவரில் ரிங்கு சிங் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் முதல் பந்திலேயே சூர்யகுமார் யாதவ் 55 பந்துகளில் சதம் விளாசி சாதித்தார்.
அதன்பின் அடுத்த பந்திலேயே ஆட்டமிழக்க, கடைசி நேரத்தில் ஜடேஜா மற்றும் ஜித்தேஷ் இருவரும் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் சேர்க்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் மஹாராஜ் மற்றும் வில்லியம்ஸ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.