பார்க்ல்: இந்திய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற 297 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பார்ல் நகரில் நடைபெற்று வருகிறது./ இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட், குல்தீப் யாதவ் இருவரும் நீக்கப்பட்டு ரஜத் படிதர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதன்பின் இந்திய அணி தரப்பில் சாய் சுதர்சன் - ரஜத் படிதர் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய ரஜத் படிதர் அதிரடியாக ரன்களை குவித்தார். 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரஜத் படிதர் பர்கர் வீசிய பந்தில் போல்டாகி ஆட்டமிழக்க, தொடர்ந்து தமிழக வீரர் சாய் சுதர்சன் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 49 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் சஞ்சு சாம்சன் - கேஎல் ராகுல் இருவரும் கூட்டணி அமைத்தனர்.
ஆடுகளம் பவுலிங்கிற்கு சாதகமாக இருந்ததன் காரணமாக இருவருமே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தேவையான பந்துகளை பவுண்டரிகள் விளாசினர். இதனால் இந்திய அணியின் ரன் ரேட் 5.5 ஆக இருந்தது. இவர்களின் பார்ட்னர்ஷிப் 52 ரன்களாக இருந்த போது, கேஎல் ராகுல் 21 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் திலக் வர்மா - சஞ்சு சாம்சன் கூட்டணி சேர்ந்தது. இதனிடையே சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 66 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
அதேபோல் மறுமுனையில் நின்றிருந்த திலக் வர்மா, 34 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு, விக்கெட்டையும் காத்து நின்றார். இதனால் 30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் இவர்கள் இருவருமே கியரை மாற்றி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். திலக் வர்மாவும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச தொடங்கினார். இதன் காரணமாக 40 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் சேர்த்திருந்தது.
இதையடுத்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த இருவரும் டி20 மோடில் அதிரடி காட்டினார். இதன் காரணமாக திலக் வர்மா 75 பந்துகளில் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். இதன்பின் மற்றொரு பக்கம் சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் விளாசிய முதல் கேரள வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சிறப்பாக ஆடிய அவர், 114 பந்துகளில் 3 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 108 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ரிங்கு சிங் அதிரடியாக ரன்களை குவிக்க, மறுமுனையில் வந்த அக்சர் படேல் 1 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இறுதி நேரத்தில் அதிரடியாக ஆடிய ரிங்கு சிங் 27 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 38 ரன்களை விளாசி அசத்தினார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்களை விளாசியது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ஹென்ரிக்ஸ் 3 விக்கெட்டுகளையும், பர்கர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.