பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கவுள்ளது. இந்த போட்டியின் வெற்றியின் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். பார்படாஸ் மைதானத்தில் சேஸிங் செய்வது எளிதாக இருக்காது என்றும் எச்சரித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்னும் சற்று நேரத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். பார்படாஸ் மைதானம் அமைந்துள்ள பகுதியில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெயில் நன்றாக அடித்து வருகிறது.

இதனால் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மழையால் ஆட்டம் பாதிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டி20 உலகக்கோப்பையை பொறுத்தவரை சேஸிங் செய்யும் அணிகளுக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் டாஸ் வென்றால் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும் என்றே பல்வேறு தரப்பிலும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் ஸ்ரீகாந்த் மற்றும் முரளி விஜய் இருவரும் பார்படாஸ் மைதானம் பற்றியும், டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதித்தனர். அப்போது முரளி விஜய் பேசுகையில், தென்னாப்பிரிக்கா அணியின் பவுலிங் பலமாக உள்ளது. ஆனால் இந்திய அணி வீரர்கள் நல்ல மனநிலையில் உள்ளனர். 180 ரன்களை இலக்கை நிர்ணயித்தாலும் இந்தியா சேஸிங் செய்யும் என்று தெரிவித்தார்.
இதனை மறுத்த ஸ்ரீகாந்த், பார்படாஸ் மைதானத்தின் தன்மையே வேறு. மழை பெய்யும் என்று நினைத்து டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துவிடக் கூடாது. ஏனென்றால் முதல் பேட்டிங் எடுக்கும் அணிக்கு நிச்சயம் பேட்டிங்கிற்கு உதவி கிடைக்கும். ஒருவேளை தென்னாப்பிரிக்கா அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தா, இந்திய அணியால் சேஸிங் செய்வது எளிதல்ல என்று தெரிவித்துள்ளார்.