சென்சுரியன்: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், 2ஆம் நாள் வானிலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி சென்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பே கனமழை பெய்ததால், மைதானத்தில் அதிகளவில் ஈரப்பதம் காணப்பட்டது. இதன் காரணமாக திட்டமிட்டபடி டாஸ் போடப்படாமல் தாமதம் ஏற்பட்டது. அரைமணி நேரம் தாமதத்திற்கு பின்னரே டாஸ் போடப்பட்டு, ஆட்டம் தொடங்கியது.

இதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல் நாளில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் சேர்த்திருந்தது. சிறப்பாக ஆடி அரைசதம் விளாசிய கேஎல் ராகுல் 70 ரன்களுடன் களத்தில் உள்ளார். அதேபோல் தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
முதல் நாள் ஆட்டம் வெறும் 59 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், திடீரென போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதன்பின் சென்சுரியனில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் 2ஆம் நாள் ஆட்டம் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டாம் நாள் வானிலை நிலவரம் தெரிய வந்துள்ளது.
அதன்படி இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது மழை பாதிப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் 84 சதவிகித மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை கணிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் மழை, பகல் 3 மணி வரை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால் நேற்றைய நாளை போலவே ஆட்டம் தொடங்குவதற்கு தாமதம் ஏற்படலாம் என்றும், ஒருவேளை சரியான நேரத்தில் தொடங்கப்பட்டாலும் மழை குறுக்கீடு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேஎல் ராகுல் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலோடு உள்ள நிலையில், 2ஆம் நாள் வானிலை நிலவரம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.