
கொரோனா வைரஸ் பரவுகிறது
2௦20ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அங்கே இருந்து சுமார் 120க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இந்தியாவிலும் சுமார் 80 பேர் வரை இதுவரை அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விளையாட்டுப் போட்டிகள்
கூட்டமாக இருக்கும் இடங்களில் அந்த வைரஸ் வேகமாக பரவுவதால் மக்கள் கூட்டமாக கூட வேண்டாம் என முன்னெச்சரிக்கை அறிவிப்பு உலகம் முழுவதும் பல நாடுகளில் வெளியாகி உள்ளது. அதனால், விளையாட்டுப் போட்டிகள் பலவற்றை தடை செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

மெத்தனம் காட்டிய பிசிசிஐ
ஐரோப்பாவில் தீவிரமாக கொரோனா பரவி வரும் நிலையில், அங்கே அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவிலும் அதே நிலை தான். ஆனால், இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடக்கும் என பிசிசிஐ கூறி வந்தது. அவர்களின் மெத்தனப்போக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஐபிஎல் சிக்கல்
குறிப்பாக சுமார் இரண்டு மாத காலம் நடைபெறும் ஐபிஎல் தொடரை திட்டமிட்டபடி நடத்துவோம் என கூறி வந்தது பிசிசிஐ. ஆனாலும், அரசு அறிவுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடர் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என கூறப்பட்டு வந்தது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர்
இதனிடையே மூன்று போட்டிகள் கொண்ட இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர் துவங்கியது. முதல் போட்டி தரம்சாலாவில் நடைபெற இருந்தது. அந்த போட்டிக்கு மிக குறைந்த அளவிலேயே ரசிகர்கள் வந்தனர்.

முதல் போட்டி
அந்தப் போட்டி மழை காரணமாக டாஸ் கூட போடப்படாத நிலையில் கை விடப்பட்டது. அடுத்த இரு போட்டிகளும் அரசு வெளியிட்ட முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்படி ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது.

பிசிசிஐ முடிவு
இந்த நிலையில், இரண்டாவது போட்டி லக்னோவில் நடைபெற இருந்தது. அந்தப் போட்டியை தள்ளி வைக்குமாறு, உத்தர பிரதேச அரசு மாஜிஸ்திரேட் மூலம் கடிதம் அனுப்பி இருந்தது. ஆனால், பிசிசிஐ அந்தப் போட்டியை நடத்த உள்ளதாக பிசிசிஐ வட்டாரம் கூறி வந்தது.

ஐபிஎல் தள்ளி வைப்பு
இந்த நிலையில், பிசிசிஐ உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் தலைவர் கங்குலி ஐபிஎல் தொடரை ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கும் முடிவை எடுத்தார். அதனால், ஐபிஎல் பிரச்சனைகளுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஒருநாள் தொடர் ரத்து
இந்த நிலையில், ஒருநாள் தொடரின் மீதமுள்ள இரண்டு போட்டிகளையும் ரத்து செய்ய உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐ-யின் ஐபிஎல் தள்ளிவைப்பு மற்றும் ஒருநாள் தொடர் ரத்து முடிவுகளை ரசிகர்கள் வரவேற்று உள்ளனர்.

பரபர மாற்றம்
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 1,35,000க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் உஷாராகி உள்ள பிசிசிஐ தொடரை ரத்து செய்ததோடு, டெல்லிக்கு தென்னாப்பிரிக்க வீரர்களை அனுப்பி வைத்துள்ளது. அங்கே இருந்து கிளம்பும் முதல் விமானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு அவர்கள் கிளம்ப உள்ளனர். ஒரே நாளில் பிசிசிஐ பெரிய மாற்றத்தை காண்பித்துள்ளது.


Click it and Unblock the Notifications