தர்மசலா: தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிகளில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வதித்திருக்கிறது.தர்மசலாவில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் பும்ரா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் களமிறங்கவில்லை.
அவர்களுக்கு பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் அணிக்கு திரும்பியிருந்தனர். இந்த சூழலில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க வீரர்கள் இந்தியாவின் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 7 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் கேப்டன் ஏய்டன் மார்க்கரம் மட்டும் தனி ஆளாக நின்று அணியை காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால் மற்ற வீரர்கள் துணைக்கு நிற்கவில்லை. 46 பந்துகளை எதிர்கொண்ட அவர் 61 ரன்கள் சேர்க்க அதற்கு அடுத்தபடியாக டொனாவன் பெரேரியா 20 ரன்கள் எடுத்தார்.
இதனால் 20 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 117 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஹர்சித் ரானா, வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனை அடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மாவும், கில்லும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
கில், பவுண்டரிகளை மட்டும் அடிக்க முயற்சி செய்தார். ஆனால் அபிஷேக் சர்மா வழக்கம் போல் சிக்ஸர், பவுண்டரி என பறக்க விட்டார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. மூன்று பவுண்டரி, மூன்று சிக்சர் என 194 ஸ்ட்ரைக் ரேட் உடன் 18 பந்துகளில் அபிஷேக் ஷர்மா 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அபிஷேக் அவுட்டான பிறகு பேட்டிங்கில் தடுமாறிய கில், 28 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மூன்றாவது வீரராக விளையாடிய திலக் வர்மா பொறுமை காத்தார். கேப்டன் சூரியகுமார் தொடர்ந்து 2 பவுண்டரிகளை அடித்து, ஹாட்ரிக் பவுண்டரி அடிக்க முயற்சி செய்து 12 ரன்களில் பெவிலியன் திரும்ப, 15.5வது ஓவரிலே இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.