ஒருநாள் தொடர்
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி தரம்சாலா மைதானத்தில் நடைபெற இருந்தது. இந்த போட்டிக்கு இந்திய அணி முழு பலத்துடன் தயார் ஆனது.
வெற்றி வேண்டும்
கடந்த நியூசிலாந்து தொடரில் இந்தியா மோசமான தோல்விகளை சந்தித்ததால், அதில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டி எந்த வீரருக்கும் இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்படவில்லை. ரோஹித் சர்மா காயம் காரணமாக பங்கேற்காதது மட்டுமே பின்னடைவாக அமைந்துள்ளது.
அணிக்கு திரும்பிய வீரர்கள்
ஹர்திக் பண்டியா, ஷிகர் தவான், புவனேஸ்வர் குமார் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பி உள்ளனர். தென்னாப்பிரிக்க அணி இளம் கேப்டன் டி காக் தலைமையில், முன்னாள் கேப்டன் பாப் டுபிளெசிஸ் வழி காட்டுதலுடன் தயாராகி இருந்தது.
ரசிகர்கள் அச்சம்
இந்த நிலையில், மக்கள் அதிகம் கூடும் கிரிக்கெட் மைதானங்களில் கொரோனா வைரஸ் பரவும் அச்சம் இருந்தது. அதனால், ரசிகர்கள் நேரில் வர அஞ்சினர். மறுபுறம், மழை பெய்யும் வாய்ப்பும் இருந்ததால் ரசிகர்கள் குறைந்த அளவிலேயே மைதானத்துக்கு வந்தனர்.
ஓவர்கள் குறைவு
எதிர்பார்த்தது போலவே போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு போட வேண்டிய டாஸ் நிகழ்வு, மழையால் தள்ளி வைக்கப்பட்டது. நீண்ட நேரம் மழை பெய்ததை அடுத்து 1.30 மணிக்கு துவங்க வேண்டிய போட்டி 5.20 வரை நடைபெறவில்லை.
போட்டி ரத்து
இந்த நிலையில், மழையால் மைதானத்தின் சில பகுதிகளில் நீர் தேங்கி இருந்தது. அதை அடுத்து போட்டியை கை விடுவதாக அம்பயர்கள் அறிவித்தனர். இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன முதல் ஒருநாள் போட்டி டாஸ் போடப்படாத நிலையில் கை விடப்பட்டது.
அடுத்த இரு போட்டிகள்
முதல் ஒருநாள் போட்டியை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் அடுத்த இரு போட்டிகளை காண ஆவலாக இருந்த நிலையில், அந்த இரண்டு போட்டிகளுக்கும் கொரோனா ரூபத்தில் சிக்கல் எழுந்துள்ளது.
அரசு அறிவுறுத்தல்
விளையாட்டு அமைச்சகம் சார்பில் விளையாட்டுப் போட்டிகளின் போது மக்கள் கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், போட்டியை நடத்தியே ஆக வேண்டும் என்றால், ரசிகர்கள் இல்லாமல் நடத்துமாறும் அறிவுறுத்தல் கூறப்பட்டுள்ளது.
ரசிகர்கள் இல்லாத மைதானம்
அதனால், இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளும் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடைபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மார்ச் 15 மற்றும் 18 அன்று இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.