டர்பன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னாய் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டர்பன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 10 சிக்ஸ், 7 பவுண்டரிகள் உட்பட 107 ரன்களை விளாசினார்.

இதனைத் தொடர்ந்து 203 ரன்கள் என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் - ரிக்கல்டன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை மார்க்ரம் விளாச, 4வது பந்தில் அர்ஷ்தீப் சிங் அவரின் விக்கெட்டை வீழ்த்தி மாஸ் கம்பேக்கை கொடுத்தார். இதன்பின் ரிக்கல்டன் - ஸ்டப்ஸ் கூட்டணி இணைந்தது.
தொடர்ந்து ஸ்டப்ஸ் கியரை அதிரடிக்கு மாற்றினார். அப்போது ஆவேஷ் கான் வீசிய பந்தை மிட் ஆஃப் தலைக்கு மேல் அடிக்க முயற்சித்து 11 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வருண் சக்கரவர்த்தி பவுலிங்கில் ரிக்கல்டனும் 21 ரன்களில் ஆட்டமிழக்க, தென்னாபிரிக்கா அணி 6 ஓவர்கள் முடிவில் 49 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது அதிரடி வீரர்களான கிளாசன் - மில்லர் கூட்டணி இணைந்தனர்.
இவர்கள் இருவரும் ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு பவுண்டரியை விளாசி, தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். இதனால் 9 ஓவர்களில் 76 ரன்களாக தென்னாப்பிரிக்கா ஸ்கோர் உயர்ந்தது. அப்போது 10வது ஓவரை வீச வருண் சக்கரவர்த்தி அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுக்க, ரவி பிஷ்னாய் 11வது ஓவரில் வெறும் ஒரு ரன்னையே விட்டுக் கொடுத்தார்.
இதனால் கிளாசன் அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். அப்போது மீண்டும் வருண் சக்கரவர்த்தி வீசிய 12வது ஓவரில் கிளாசன் சிக்ஸ் அடிக்க முயற்சித்து 25 ரன்களில் வெளியேறினார். அதே ஓவரில் மில்லரும் 18 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டத்தில் இந்திய அணியின் கைகள் ஓங்கியது. பின்னர் வந்த ரவி பிஷ்னாய் தன் பங்கிற்கு அடுத்த ஓவரிலேயே க்ரூகரை 1 ரன்னிலும், சிமிலானேவை 6 ரன்களிலும் வீழ்த்தினார்.
இதனால் தென்னாப்பிரிக்கா அணி 93 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் வந்த யான்சன் 8 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, திடீரென கோட்சியே விஸ்வரூபம் எடுத்தார். ஹர்திக் பாண்டியா பவுலிங்கில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட, தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 74 ரன்கள் தேவையாக இருந்தது.
தொடர்ந்து சூர்யகுமார் யாதவின் அசத்தல் த்ரோவால் கோட்சியே 23 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் ஆவேஷ் கான் பந்தில் மஹாராஹ் 5 ரன்களில் போல்டாகி ஆட்டமிழந்தார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 17.5 ஓவர்களில் 141 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னாய் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.