தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் ஒரு போட்டி அதீத பணி பொழிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்த போட்டியில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி ஐந்தாவது டி20 போட்டியில் களம் இறங்கியது. அகமதாபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் மார்க்கரம், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கில் காயம் காரணமாக விளையாடவில்லை என்பதால் அவருக்கு பதில் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். தொடக்க வீரராக அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து அதிரடி காட்டினார். இந்த ஜோடி 5.4 ஓவரில் முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தது.
சிறப்பாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சஞ்சு சாம்சன் தன் பங்கிற்கு நான்கு பவுண்டரி, இரண்டு சிக்சர் என 22 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். வழக்கம் போல் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 5 ரன்களில் வெளியேறினார். இந்த நிலையில் திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்து தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்தனர்.
திலக்கு வர்மா 42 பந்துகளில் 73 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா 5 சிக்சர், 5 பவுண்டரி என 25 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். சிவம் துபே இறுதியில் மூன்று பந்துகளில் 10 ரன்கள் எடுக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் குயின்டன் டிகாக் வழக்கம் போல் அதிரடி காட்டி இந்தியாவுக்கு பயத்தை தந்தார்.
ரீசா ஹென்றிக்ஸ் 13 ரன்கள் வெளியேற டிகாக்குடன் ஜோடி சேர்ந்த சிஎஸ்கே வீரர் பிரவீஸ் பட்டாசை போல் பேட்டிங்கில் சிதறினார். இதனால் தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கட்டத்தில் ஆட்டம் கையை விட்டு வெற்றி வாய்ப்பு நழுவும் நிலையில் இருந்தது. அப்போது பும்ரா வீசிய ஒரு பந்தில் குயின்டிகாக் 35 பந்துகளில் 65 ரன்கள் எடுத்திருந்தபோது அவரிடமே கேட்ச் ஆகி வெளியேறினார்.
இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. பிரவீஸ் ஹர்திக் பாண்டியா பந்தில் 31 ரன்களில் வெளியேற வருண் சக்கரவர்த்தி ஒரே ஓவரில் எய்டன் மார்க்ரம் மற்றும் டொனவன் பெரெரியா விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தினார். இதனால் தென்னாப்பிரிக்காவின் தோல்வி உறுதியானது.அந்த அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி தொடரை மூன்றுக்கு ஒன்று என்ற நிலையில் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் இந்திய அணி 18வது முறையாக தொடர்ந்து டி20 தொடரை வென்றுள்ளது.