ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதன் மூலமாக இந்த டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதல்முறையாக டாஸ் வென்று ரசிகர்களிடையே விவாதமாகியுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி ஜொகன்னஸ்பர்க் மைதானத்தில் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், தென்னாப்பிரிக்கா அணி கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கியுள்ளது. இதுவரை நடந்துள்ள 3 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் தான் டாஸை வென்றிருந்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதல்முறையாக டாஸ் வென்றார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி முதல் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்பின் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், நாங்கள் முதல் பேட்டிங் செய்கிறோம். கடந்த 2 முதல் 3 போட்டிகளாக எங்கள் செயல்பாடுகள் நன்றாக இருந்துள்ளது. அதனால் தொடர்ந்து அந்த திட்டத்தை செயல்படுத்த விரும்புகிறோம்.
முதல் போட்டியில் இருந்தே எங்களின் திட்டம் சரியாக இருக்கிறது. எப்போதும் முதல் பேட்டிங் ஆடிவிட்டு, இலக்கை டிஃபெண்ட் செய்ய வேண்டும் என்று நினைத்து வந்துள்ளோம். அதேபோல் ஒருநாள் மட்டுமே இடைவெளியில் போட்டியை விளையாடுவது எளிய விஷயம் தான். இந்திய வீரர்கள் அனைவரும் அதற்கு தயாராகவே இருக்கின்றனர். இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பேசுகையில், நாங்கள் முதல் பேட்டிங் செய்வதா அல்லது பவுலிங் செய்வதா என்ற குழப்பம் இருந்தது. ஒருவேளை டாஸ் வென்றிருந்தால் பேட்டிங் செய்திருப்போம் என்று நினைக்கிறேன். கடந்த 3 போட்டிகளில் நாங்கள் 3 துறைகளிலும் சிறப்பாக செயல்படவில்லை. அதற்கேற்ப தயாராகி வருகிறோம். தற்போது டி20 தொடரை எங்களால் வெல்ல முடியாது.
ஆனாலும் முதல் போட்டியில் தோல்வியடைந்த பின், அடுத்த போட்டியிலேயே கம்பேக் கொடுத்தோம். அதனால் இந்தப் போட்டியில் வென்று நிச்சயம் டி20 தொடரை சமன் செய்ய விரும்புவோம். நாங்களும் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று தெரிவித்தார். மேலும் இந்த பிட்ச் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சரி சமமாக உதவி செய்யும் என்று பார்க்கப்படுகிறது.
இந்திய பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், ரமன்தீப் சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னாய், வருண் சக்கரவர்த்தி
தென்னாப்பிரிக்கா பிளேயிங் லெவன்: ரியான் ரிக்கல்டன், ஹென்ரிக்ஸ், மார்க்ரம், ஸ்டப்ஸ், கிளாசன், டேவிட் மில்லர், மார்கோ யான்சன், கோட்ஸி, சிமிலானே, மஹாராஜ், சிபாம்லா