ஜோஹன்னஸ்பெர்க் : இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்தார். அதே சமயம், அதில் ஒரு சர்ச்சையும் வெடித்தது.
சூர்யகுமார் யாதவ் சதம் அடிப்பதற்காக 19வது ஓவரின் போது சுயநலமாக சிங்கிள் ரன் ஓட மறுத்தார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்து ரசிகர்கள் அவரை வறுத்து எடுத்து வருகின்றனர். என்ன நடந்தது?
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. சுப்மன் கில் 12, திலக் வர்மா 0, ஜெய்ஸ்வால் 60, ரிங்கு சிங் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் நான்காம் வரிசை பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் 20வது ஓவர் வரை களத்தில் நின்று சதம் அடித்து கடைசி ஓவரில் தான் ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில், 19வது ஓவரின் போது சூர்யகுமார் யாதவ் 98 ரன்களுடன் களத்தில் இருந்தார். அப்போது அந்த ஓவரின் கடைசி மூன்று பந்துகளையும் ஜிதேஷ் சர்மா சந்தித்தார். கடைசி பந்தில் ஜிதேஷ் சர்மா பந்தை தட்டி விட்டு, ஒரு ரன் ஓட முயன்றார். ஆனால், எதிரில் நின்று இருந்த சூர்யகுமார் யாதவ் ரன் ஓட வேண்டாம் என அவரை தடுத்தார்.
அதற்கு காரணம், அப்போது தான் கடைசி ஓவரின் முதல் பந்தை சூர்யகுமார் யாதவ் சந்திக்க முடியும். சதம் அடிக்க இன்னும் இரண்டு ரன்களே தேவை என்ற நிலையில் சூர்யகுமார் யாதவ் தனக்கு கடைசி ஓவரில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்க வேண்டும்.அப்போது தான் சதம் அடிக்க முடியும் என்ற சுயநல எண்ணத்தில் அப்படி செய்ததாக ரசிகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்
ஜிதேஷ் சர்மாவும் அதிரடி பேட்ஸ்மேன் தான். அவரை ஃபினிஷர் என்ற அடைமொழியுடன் தான் அணியில் சேர்த்து இருக்கிறார்கள் எனும் போது ஏன் ஜிதேஷ் சர்மா கடைசி ஓவரின் முதல் பந்தை சந்தித்து இருக்கக் கூடாது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இத்தனைக்கும் ஜிதேஷ் சர்மா 19வது ஓவரில் தான் சந்தித்த மூன்று பந்துகளில் ஒரு பவுண்டரி அடித்து இருந்தார்.
ஒருவேளை சூர்யகுமார் யாதவ் நீண்ட நேரம் பேட்டிங் ஆடி விட்டதால் கடைசி ஓவரில் தன்னால் எளிதாக சிக்ஸ் அடிக்க முடியும் என நினைத்து இருக்கலாம். ஆனால், சூர்யகுமார் யாதவ் சதம் அடிக்கவே சுயநலமாக சிங்கிள் ரன் ஓடாமல் நின்றார் என்ற விமர்சனம் எழுந்தது. கடைசி ஓவரின் முதல் பந்தில் சூர்யகுமார் 2 ரன்கள் ஓடி 55 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். சதம் அடித்த அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழந்தார்.
தன் நான்காவது சர்வதேச டி20 சதம் அடித்ததன் மூலம் சூர்யகுமார் யாதவ் பல்வேறு சாதனைகளையும் முறியடித்தார். அது குறித்த செய்தி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 201 ரன்கள் குவித்த நிலையில், அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 95 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் சூர்யகுமார் யாதவ் செயல் கடும் விமர்சனத்தில் இருந்து தப்பியது. 2023 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி அடித்த இரண்டு சதங்களின் போதும் இதே போன்ற சுயநல ஆட்டம் என்ற விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.