கவுகாத்தி: இந்தியாவை "மண்டியிடச் (grovel) செய்ய விரும்பினோம்" என்று தென்னாப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் பேசியது, கிரிக்கெட் உலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அவரது இந்த அவமரியாதையான பேச்சுக்கு, அனில் கும்ப்ளே, புஜாரா, பார்த்திவ் படேல் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக "grovel" என்ற வார்த்தை இன அடையாளத்துடன் கூடிய இழிவான சொல்லாடலாக பார்க்கப்படுகிறது. 1976இல் கிரிக்கெட்டில் ஏற்கனவே இந்த வார்த்தை பயன்பாட்டால் இங்கிலாந்து கேப்டன் ஒருவருக்கும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இடையே சர்ச்சை வெடித்தது. அப்படி இருக்க தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் வேண்டுமென்றே அந்த வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார் என்பதே இந்த சர்ச்சைக்கு காரணமாக உள்ளது.

கவுகாத்தி டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க அணி 500 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றும் 'டிக்ளேர்' செய்யாமல் தொடர்ந்து பேட்டிங் செய்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோதுதான், கான்ராட் அந்தச் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல், "அந்த வார்த்தையின் கனம் தென்னாப்பிரிக்கப் பயிற்சியாளருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அவர் அதைப் பேசும்போது முகத்தில் ஒருவித நக்கலான சிரிப்பு இருந்தது. இது அப்பட்டமான அவமரியாதை என்பதில் சந்தேகமே இல்லை.
கிரிக்கெட் களத்தில் சண்டையிடலாம், கடுமையாக விளையாடலாம். ஆனால் இதுபோன்ற வார்த்தைகள் தேவையில்லை. நாள் முடிவதற்குள் கான்ராட் தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நான் நினைக்கிறேன்," என்று காட்டமாகத் தெரிவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, இந்த வார்த்தையின் வரலாற்றுப் பின்னணியைச் சுட்டிக்காட்டி தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். "இந்த வார்த்தைக்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன், இங்கிலாந்து கேப்டன் டோனி கிரேக், இதே வார்த்தையை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகப் பயன்படுத்தினார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது வரலாறு.
தென்னாப்பிரிக்கா இந்தத் தொடரை வெல்லப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால், நீங்கள் வெற்றி பெறும் நிலையில் இருக்கும்போது, உங்கள் வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்த வேண்டும். அந்த நேரத்தில் பணிவுதான் மிக முக்கியம். ஒரு பயிற்சியாளரிடம் இருந்து இப்படி ஒரு பேச்சை நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் வெல்லும்போது, முதலில் அடக்கமாக இருக்க வேண்டும், இப்படிப் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசக்கூடாது" என்று கும்ப்ளே கடுமையாக விமர்சித்துள்ளார்.
'முன்னாள் வீரர் புஜாரா, இந்த வார்த்தை இந்திய வீரர்களை நிச்சயம் காயப்படுத்தும் என்று கூறினார். "இந்த வார்த்தை நிச்சயம் இந்திய 'டிரெஸ்ஸிங் ரூமை' காயப்படுத்தும், கோபத்தையும் மூட்டும். ஆனால் இதற்கு வார்த்தைகளால் பதிலளிக்கக் கூடாது, பேட்டிங்கில் போராடி பதிலளிக்க வேண்டும்.
மூன்று செஷன்களையும் நின்று விளையாடி, பார்ட்னர்ஷிப் அமைத்து பதிலடி கொடுப்பதே சிறந்த வழி. நாம் சரியாக விளையாடாததால்தான் இந்த நிலையில் இருக்கிறோம். எனவே, நமது பதில் பேட்டிங்கில் இருந்துதான் வர வேண்டும்" என்று நிதானமாக ஆனால் ஆணித்தரமாகத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார் புஜாரா.
தென்னாப்பிரிக்கா அணி களத்தில் சிறப்பாக விளையாடி தொடரை வெல்லும் நிலையில் இருந்தாலும், பயிற்சியாளரின் இந்த ஒரு பேச்சு, அவர்களது வெற்றிக்கு ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளது.