பார்ல்: சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்து 8 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் முதல் சதத்தை விளாசி சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 19 வயதிலேயே அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சஞ்சு சாம்சன். ஸ்ரீசாந்த், ராபின் உத்தப்பா உள்ளிட்டோருக்கு பின் கேரளா கிரிக்கெட்டில் இருந்து இளம் வயதிலேயே வெளிச்சத்தை பார்த்த வீரர் சஞ்சு சாம்சன். 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதே சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் சஞ்சு சாம்சனுக்கு எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. அதன்பின் பலமுறை இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட சஞ்சு சாம்சன், இதுவரை தொடர்ச்சியாக 2 தொடர்களில் கூட வாய்ப்பை பெற்றதில்லை. அதிலும் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின் எந்த தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டாலும், சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை என்றால் ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்க தொடங்கினார்கள்.
இது கடந்த 4 ஆண்டுகளாகவே தொடர்கதையாக இருந்து வந்தது. அவ்வப்போது சஞ்சு சாம்சன் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டாலும், பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்பட மாட்டார். இதுவே சஞ்சு சாம்சனுக்கு அதிக ரசிகர்கள் உருவாகுவதற்கும், செண்டிமெண்டலாக ஒன்றிணைவதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது.
அதேபோல் சஞ்சு சாம்சன் திறமையான பேட்ஸ்மேன் என்றாலும், சீராக ரன்கள் குவிக்க தவறுவதே அவர் மீதான விமர்சனமாக இருந்தது. ஆனால் சஞ்சு சாம்சன் இதுவரை ஆடியுள்ள ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கையே 16 தான் என்பதையும், அதில் 14 இன்னிங்ஸ்களில் தான் பேட்டிங் செய்துள்ளார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். தற்போது கூட டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் சூழலில், ஒருநாள் அணியில் தான் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் 50 ஓவர் உலகக்கோப்பை நெருங்கிய போது டி20 அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றிருந்தார். இதனால் சஞ்சு சாம்சனை வேண்டா வெறுப்புடனே இந்திய அணி நிர்வாகம் பயன்படுத்தியது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் தனது முழு திறமையையும் நிரூபித்து காட்டியுள்ளார்.
அதிலும் வாழ்வா சாவா போட்டியில் இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் ஆட்டமிழந்து வெளியேறிய போதும், பொறுப்புடன் விளையாடி சதத்தை விளாசியுள்ளார் சஞ்சு சாம்சன். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசிய முதல் கேரளா வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது.