லண்டன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பயிற்சியில் இருந்து விலகிய விராட் கோலி, மும்பைக்கு வராமல் லண்டன் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி20 தொடர் 1-1 என்ற சமனில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டை தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்தது.

இதன்பின் டிச.26ஆம் தேதி இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ப்ரிடோரியாவில் உள்ள மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கு இடையிலான 3 நாட்கள் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த பயிற்சியில் இந்திய அணியின் அனைத்து வீரர்களும் பங்கேற்றதாக கூறப்பட்டது. அதேபோல் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு பயிற்சியளிக்க முடியாது என்று கூறிவிட்டு, டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்துவதாக ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர்கள் குழு கூறி அதற்கான தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதனால் தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய அணி புதிய வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, பயிற்சி போட்டியில் இருந்து விலகி, திடீரென குடும்ப பிரச்சனை காரணமாக மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பியதாக கூறப்பட்டது.
அதேபோல் நேற்றிரவு தென்னாப்பிரிக்கா புறப்பட திட்டமிட்டதாகவும் தகவல் வெளியாகியது. ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மும்பை வரவில்லை என்றும், அவரது மனைவி அனுஷ்கா சர்மா இருக்கும் லண்டனுக்கு விமானம் ஏறியதாக தெரிய வந்துள்ளது. திடீரென மனைவி அனுஷ்காவை சந்திக்க விராட் கோலி சென்றது ஏன் என்று எந்த காரணமும் வெளிவரவில்லை. உலகக்கோப்பை தொடரின் போதே விராட் கோலி பயிற்சி போட்டிகளில் இருந்து விலகி, குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டது குறிப்பிடத்தக்கது.