மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அவசர பிரச்சனை காரணமாக தென்னாப்பிரிக்காவில் இருந்து திடீரென மும்பை திரும்பியுள்ளது தெரிய வந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி20 தொடர் 1-1 என்ற சமனில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டை தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்தது.

இதன்பின் டிச.26ஆம் தேதி இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ப்ரிடோரியாவில் உள்ள மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கு இடையிலான 3 நாட்கள் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த பயிற்சி ஆட்டத்தை காண யாருக்கும் அனுமதியில்லை என்பதால், கதவுகள் அடைக்கப்பட்டு இந்திய அணி வீரர்கள் பயிற்சியளித்து வருகின்றனர். இந்த நிலையில் 3 நாள் ஆட்டத்தில் முதல் நாளில் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா உள்ளிட்டோர் பேட்டிங் செய்ததாகவும், அதில் சுப்மன் கில் சதம் விளாசியதாகவும் தகவல் வெளியாகியது.
அதேபோல் இளம் வீரர் சர்ஃபராஸ் கான் 61 பந்துகளில் சதம் விளாசி அசத்தியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பங்கேற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. கடந்த வாரமே இந்திய அணியின் விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்ட நிலையில், திடீரென 3 நாட்களுக்கு முன்பாக விராட் கோலி மும்பைக்கு திரும்பியுள்ளார்.
இந்திய அணி வீரர்களுக்கு இடையிலான பயிற்சி போட்டியில் இருந்து விலகுவது குறித்து பிசிசிஐ மற்றும் பயிற்சியாளர்களுக்கும் விராட் கோலி முறையாக தகவல் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. விராட் கோலி திடீரென தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்புவதற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால் குடும்பத்தினரை சந்தித்துவிட்டு விராட் கோலி இன்று மாலை மீண்டும் தென்னாப்பிரிக்கா புறப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் போதுமான பயிற்சியில் ஈடுபட்ட பின், விராட் கோலி நிச்சயம் முதல் போட்டியில் களமிறங்குவார் என்று பார்க்கப்படுகிறது. இருப்பினும் விராட் கோலி அவசர அவசரமாக மும்பை திரும்பியது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.