பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற்று, 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலமாக 11 ஆண்டுகளாக ஐசிசி கோப்பை ஏக்கத்தை இந்திய அணி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்துள்ளது.

கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மில்லர் மற்றும் ரபாடா விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியின் 5வது பந்தில் ரபாடா விக்கெட்டை வீழ்த்திய போதே, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆர்ப்பரித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
ராகுல் டிராவிட் விளையாடிய காலத்தில் கூட இவ்வளவு எமோஷனை வெளியில் காட்டியதில்லை. அதன்பின் கடைசி பந்தில் இந்திய அணி வெற்றி உறுதியான நிலையில், கேப்டன் ரோகித் சர்மா தரையில் கீழே படுத்து கொண்டு கைகளால் தரையை குத்தி ஆர்ப்பரித்து கொண்டாடினார். மறுபக்கம் விராட் கோலி ஓடி வந்து ஹர்திக் பாண்டியாவை கட்டியணைத்து கண்ணீர்விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இன்னொரு பக்கம் எமோஷனலான ஹர்திக் பாண்டியா வெளிப்படையாக கண்ணீர் சிந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதன்பின் பும்ரா தனது மனைவியான சஞ்சனா கணேசனை கட்டியணைத்து நீண்ட நேரம் எமோஷனலாக கொண்டாடினார். இன்னொரு பக்கம் ரோகித் சர்மா தனியாக வானத்தை பார்த்து கண்ணீர் சிந்தினார். இந்த காட்சிகளை பார்ப்பது ரசிகர்களுக்கும் எமோஷனலாக அமைந்தது.