கொல்கத்தா: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வந்தபின், சொந்த மண்ணில் ஆடிய 6 டெஸ்ட் போட்டிகளில் 4ல் தோல்வி அடைந்திருப்பது கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தோல்விகளில் இருந்து எதையும் கற்பதில்லை என்றும் குரல்கள் எழுந்துள்ளன.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு வெறும் 124 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த இலக்கை கூட எட்ட முடியாமல் இந்திய அணி 93 ரன்களுக்கு சுருண்டுள்ளது.

சுப்மன் கில் காயம் காரணமாக பாதியோடு விலகி இருந்தாலும், 124 ரன்களை எளிதாகவே எடுத்திருக்க முடியும். ஆனாலும் கொஞ்சம் கூட பொறுப்பின்றி இந்திய பேட்ஸ்மேன்கள் செயல்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேபோல் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வந்த பின், சொந்த மண்ணில் ஆடிய 6 போட்டிகளில் 4ல் தோல்வியை சந்தித்துள்ளது.
கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. ஆனால் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி மீண்டும் தோல்வி அடைந்துள்ளது.
இதன் மூலமாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இதற்கு முன் அடைந்த தோல்விகளில் இருந்து எந்த பாடத்தை கற்கவில்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்திய அணியின் பிளேயிங் லெவனிலும் கம்பீர் தொடர்ச்சியாக சொதப்பி வருவதாக பார்க்கப்படுகிறது. சாய் சுதர்சன் நல்ல ஃபார்மில் இருந்தும் எதற்காக பெஞ்ச் செய்யப்பட்டார் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேபோல் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறினார்கள். அதேபோல் தென்னாப்பிரிக்கா ஸ்பின்னர்களுக்கு எதிராகவும் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறியது கண்முன் தெரிந்தது. இதனால் பிட்சை ஸ்பின்னர்களுக்கு சாதகமாக மாற்றாமல் இந்திய அணி நிர்வாகம் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தல் வரத் தொடங்கியுள்ளது.