மும்பை: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இந்திய அணிக்குப் பின்னடைவாக ஒரு செய்தி வந்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின்போது இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா காயத்துடன் வெளியேறியது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (புதன்கிழமை) இரவு நவி மும்பையில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. அந்த வெற்றி மகிழ்ச்சியை அளித்தாலும், பந்துவீச்சின் போது நடந்த ஒரு சம்பவம் அணி நிர்வாகத்திற்குத் தலைவலியை உண்டாக்கியுள்ளது.

இந்தப் போட்டியின்போது பந்துவீச வந்த வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா, ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசினார். அந்த ஓவரில் அவர் 16 ரன்களைக் கொடுத்தார். குறிப்பாக அந்த ஓவரை வீசும்போது, இரண்டு முறை பாதியிலேயே ஓடிவந்து பந்துவீசாமல் நிறுத்தினார்.
ஓவர் முடிந்த சிறிது நேரத்திலேயே அவர் தனது முழங்காலரைப் பிடித்துக்கொண்டு வலியால் துடித்தார். பின்னர் மைதானத்திலிருந்து சிரமப்பட்டு வெளியேறினார். அவர் மீண்டும் களத்திற்குத் திரும்பவில்லை.
வரும் பிப்ரவரி 8ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொள்கிறது. ஏற்கனவே ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலா எலும்பு காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த மாதம் தான் திலக் வர்மா அறுவை சிகிச்சைக்குப் பின் குணமடைந்து அணிக்குத் திரும்பினார்.
இந்நிலையில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பங்களிக்கக்கூடிய ஹர்ஷித் ரானா காயமடைந்திருப்பது அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அவரது காயம் எவ்வளவு தீவிரமானது என்பது குறித்தோ, முதல் போட்டியில் அவர் பங்கேற்பாரா என்பது குறித்தோ இந்திய கிரிக்கெட் வாரியம் இதுவரை எந்த அறிவிப்பையையும் வெளியிடவில்லை.
காயம் குறித்த கவலை இருந்தாலும், நேற்றைய போட்டியில் காயத்திலிருந்து மீண்டு வந்த திலக் வர்மா செயல்பட்ட விதம் ஆறுதல் அளித்துள்ளது. அவர் 19 பந்துகளில் 45 ரன்கள் குவித்ததுடன், பந்துவீச்சிலும் ஒரு ஓவர் வீசினார். முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா நேற்றைய போட்டியில் களமிறங்கவில்லை. ஹர்ஷித் ரானாவின் நிலை குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.