ராய்ப்பூர்: இந்தியா,தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ஆட்டத்தின் திருப்புமுனை எங்கு ஏற்பட்டது என்பது குறித்து முன்னாள் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான் கூறியுள்ளார்,ராய்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது.
370 ரன்கள் வரை இந்தியா குவிக்க வாய்ப்பிருந்தும், தென்னாப்பிரிக்கா கட்டுக்கோப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தியதாக இர்பான் பதான் தெரிவித்தார்.36வது ஓவருக்கு முன் இந்தியாவின் ரன்ரேட் 7.28 ஆக இருந்தது. அப்போது 255/2 என்ற வலுவான நிலையில் இருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் விராட் கோலி ஆகியோர் களத்தில் நிலைத்து நின்று ஒரு பெரிய ஸ்கோருக்கான அடித்தளத்தை அமைத்தனர்.

ஆனால், கோலி 102 ரன்களிலும், கெய்க்வாட் 105 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். கே.எல். ராகுல் கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்து 66 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாலும், கடைசி 11 ஓவர்களில் இந்திய அணி வெறும் 74 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இது குறித்து பேசிய இர்ஃபான் பதான், "எய்டன் மார்க்ரம், டெம்பா பவுமாவை போலவே மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தார். மாத்யூ ப்ரெட்ஸ்கே மற்றும் டிவால்ட் ப்ரெவிஸ் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர். இந்தியாவின் ரன் வேகத்தை கட்டுப்படுத்திய பந்துவீச்சும் பாராட்டுக்குரியது."
"358 ரன்கள் என்பது 370 ரன்களாகவும் இருந்திருக்கலாம், ஆனால் 39 முதல் 49 ஓவர்கள் வரை வெறும் 55 ரன்கள் மட்டுமே கொடுத்து அவர்கள் சிறப்பாக கட்டுப்படுத்தினர். லுங்கி என்கிடி பந்துவீசத் தொடங்கி முடித்த விதத்தில் பெரிய வித்தியாசம் இருந்தது. கே.எல். ராகுல் கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தது அற்புதமானது. ஆனால் தென் ஆப்பிரிக்கா எப்படி ரன் வேகத்தை கட்டுப்படுத்தியது என்பதுதான் முக்கியம்."
"அதுவே வித்தியாசத்தை ஏற்படுத்தியது. ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்த விதத்தால் இந்தியா சிக்கலில் சிக்கும் என்று வர்ணனையின் போது பேசினோம். ஹர்ஷித் ரானா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசினர். ஆனால் புதிய பந்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விக்கெட்டுகளை இழக்கக்கூடாது என்பதே தென் ஆப்பிரிக்காவின் திட்டம்."
"மார்க்ரம் கவனமாக விளையாடினார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவரது அணுகுமுறை தெளிவாக இருந்தது. மார்க்ரமின் முந்தைய மூன்று சதங்கள் மிடில் ஆர்டரில் வந்தவை. இதுவே தொடக்க வீரராக எடுத்த முதல் சதம்.பந்து ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே வந்தபோது, அவர் லெக்-ஸ்டம்பில் நின்று இடைவெளியை பயன்படுத்த முயற்சித்தார்."
"பவுன்ஸைப் பயன்படுத்த அவர் பின்னால் நின்று 'கட்' ஷாட்களை சிறப்பாகப் பயன்படுத்தினார். வாஷிங்டன் சுந்தருக்கு எதிராக நேராக ஒரு பவுண்டரி அடித்தார், குல்தீப் யாதவுக்கு எதிராக பின் காலால் ஒரு ஷாட் அடித்தார். டிவால்ட் ப்ரெவிஸ் எதிர்காலத்தில் ஒரு பெரிய வீரராக வரப்போகிறார்"
"யஷஸ்வி ஜெய்ஸ்வால் மார்க்ரமின் கேட்சை தவறவிட்டார். இது நடப்பதுண்டு, ஆனால் ஜெய்ஸ்வாலிடம் இதைவிட சிறந்த ஃபீல்டிங் எதிர்பார்க்கப்படுகிறது. டெம்பா பவுமாவும் சிறப்பாக விளையாடினார். ப்ரெட்ஸ்கேவின் கிரிக்கெட் பயணமும் அற்புதமானது. 11 போட்டிகளில் ஏழு அரைசதங்கள். அவர் அனைத்து போட்டிகளையும் வெளிநாட்டிலேயே விளையாடி, வெவ்வேறு களங்களில் சிறப்பாக விளையாடும் திறனை நிரூபித்துள்ளார்."
"இந்திய பந்துவீச்சாளர்கள் போதிய 'ஸ்லோவர்' பந்துகளை வீசவில்லை. ஆனால் அவர் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்கிறார். டிவால்ட் பிரெவிஸ் எதிர்காலத்தில் ஒரு பெரிய வீரராக வரப்போகிறார். சுழல் மற்றும் வேகப்பந்து வீச்சு இரண்டிற்கும் எதிராக பெரிய ஷாட்கள் ஆடுகிறார். சிஎஸ்கே இதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடையும். தென் ஆப்பிரிக்க அணியின் வரிசையில் அவர் ஒரு சிறந்த பிளஸ். அவர் வழங்கிய உத்வேகத்தால் அவரது இன்னிங்ஸ் மிக முக்கியமானதாக இருந்தது. கார்பின் பாஷ் ஆட்டத்தை ஆழமாக எடுத்துச் சென்று முடிக்கும் விதம் பாராட்டுக்குரியது."
"குல்தீப் யாதவ் பந்துவீசிய விதத்தைப் பார்த்தால், அவர் கடுமையாக முயற்சித்துக் கொண்டிருந்தார். அப்படி முயற்சி செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அவர் அச்சுறுத்துவதாகத் தெரியவில்லை, ஒருவேளை பந்து ஈரமானதால் இருக்கலாம். சவாலான சூழ்நிலையிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் போராடினார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் 350 ரன்கள் எடுத்தும் தோல்வியடைந்தது என்றால், இந்தியாவும் தவிர்க்கக்கூடிய தவறுகளைச் செய்தது என்றே அர்த்தம்."
"ஜெய்ஸ்வால் அந்தக் கேட்சைப் பிடித்திருந்தால், வித்தியாசம் ஏற்பட்டிருக்குமா? ஏற்பட்டிருக்கலாம். பழைய பந்தில் பந்துவீச்சாளர்கள் சிறந்த 'லென்த்களில்' பந்துவீசியிருக்கலாம். 'பவுன்சர்களை' தலைக்கு மேல் வீசியிருக்கலாம். ஜடேஜா வேகமாக விளையாடி சில ரன்கள் சேர்த்திருந்தால், வித்தியாசத்தைக் கொடுத்திருக்கும் என்று நான் கருதுகிறேன். இறுதியில் நான்கு பந்துகளில் வித்தியாசம் இருந்தது. ஜடேஜா அந்த 3-4 ஷாட்களை கூடுதலாக விளையாடியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்," என்று கூறினார். இந்த தொடரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி சனிக்கிழமை, டிசம்பர் 6 அன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.