விசாகப்பட்டினம்: 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியில், இந்திய விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷுக்கு ஏற்பட்ட 'காயம்' ஒரு திட்டமிட்ட நாடகம் என்று தென்னாப்பிரிக்க வீராங்கனை நடீன் டி கிளெர்க் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, ரிச்சா கோஷ் 77 பந்துகளில் 94 ரன்கள் குவித்து பெரும் பலம் சேர்த்தார்.

இந்தப் போட்டியின் இரண்டாவது பாதியில், இந்திய அணி நிர்ணயித்த இலக்கை தென்னாப்பிரிக்கா விரட்டியது. ஆட்டம் மிகவும் உச்சகட்டப் பரபரப்பான கட்டத்தை எட்டியிருந்தது. 47-வது ஓவரை கிராந்தி கவுட் வீச, அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளில் நடீன் டி கிளெர்க் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசி, ஆட்டத்தைத் தென்னாப்பிரிக்கா பக்கம் திருப்பினார்.
சரியாக அந்த நேரத்தில், இந்திய விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ், எந்தக் காயம் என்று குறிப்பிடப்படாத நிலையில், திடீரென மைதானத்தில் வலியால் துடிப்பது போலக் கீழே அமர்ந்தார். உடனடியாக ஆட்டம் நிறுத்தப்பட்டு, இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் களத்திற்குள் வந்து அவருக்குப் பயிற்சி அளித்தார். ஆனால், அந்தக் காயம் தீவிரமானதாகத் தெரியவில்லை. இந்தத் தேவையற்ற தாமதம், அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த நடீன் டி கிளெர்க்கிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நடீன் டி கிளெர்க், ரிச்சா கோஷின் காயம் குறித்துத் தங்கள் அணிக்குச் சந்தேகம் இருந்ததாக வெளிப்படையாகக் கூறினார். "ஆம், அவருக்கு உண்மையாகவே ஏதேனும் காயம் ஏற்பட்டதா என்று நாங்கள் கேள்வி எழுப்பினோம்," என்று அவர் கூறினார்.
மேலும், "ஆட்டத்தின் வேகத்தைக் குறைப்பதற்காக இந்திய அணி செய்த ஒரு தந்திரமான நகர்வு (Tactical Move) இது என்று நாங்கள் தெளிவாக உணர்ந்தோம். அவர்கள் ஆட்டத்தை மெதுவாக்க முயன்றனர். அது ஒரு நாடகம் என்பது எங்களுக்குத் தெரியும்" என்று நடீன் டி கிளெர்க் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
எனினும், அந்தத் தாமதம் தங்களுக்கு ஒரு வகையில் உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார். "இறுதியில், அந்தத் தாமதம் எங்களுக்கு உதவியது. எங்களுக்கு ஓய்வெடுக்கவும், என் ஆட்டத் திட்டங்களை மறுபரிசீலனை செய்யவும் சில வினாடிகள் கிடைத்தன" என்றும் அவர் கூறினார்.
சமீப காலமாக போட்டியின் கடைசி சில ஓவர்களின் போது ஆட்டத்தின் வேகத்தைக் குறைத்து, எதிரணியின் உத்வேகத்தைச் சிதைக்கும் இந்த உத்தி, கிரிக்கெட்டில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 2024-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இதே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய ஆடவர் அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், இதே போன்ற ஒரு காய நாடகத்தை வெற்றிகரமாக அரங்கேற்றினார். இப்போது மகளிர் கிரிக்கெட்டிலும் இதே போன்ற சர்ச்சை எழுந்துள்ளது. இது 'விளையாட்டுத் தர்மம்' குறித்த விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது.