அகமதாபாத்: டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஆரம்ப கட்டத்திலே பெரும் அதிர்ச்சியை சந்தித்து இருக்கிறது. லீக் சுற்றில் தோல்வியே தழுவாத இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது.
2024 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றது. அதன் பிறகு டி20 உலக கோப்பையில் இரு அணிகளும் மீண்டும் இன்று மோதியது. சூப்பர் 8 சுற்றில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த தருணத்தில் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரராக இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். தொடர்ந்து மூன்று போட்டிகளில் அபிஷேக் ஷர்மா டக் அவுட் ஆன நிலையில், இஷான் கிஷன் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த சூழலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் முதல் ஓவரை சுழற்பந்துவீச்சாளரை வைத்து தென்னாப்பிரிக்க அணி பயன்படுத்தியது. இதனால் பெரிய ஷார்ட் ஆட முடியாமல் இசான் கிஷன் தடுமாறினார். ஏய்டன் மார்க்கரம் தொடர்ந்து ஸ்டம்புகளை நோக்கியே பந்துகளை வீசி கடும் நெருக்கடி கொடுத்தார்.
இந்த நெருக்கடியை உடைக்க முற்பட்டபோது இஷான் கிஷன் பெரிய ஷாட் ஆட முற்பட்டு கேட்ச் ஆகி வெளியேறினார். இதனால் இந்திய அணி 0 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. மறுமுனையில் அபிஷேக் ஷர்மா பவுண்டரி அடித்து தனது t20 உலக கோப்பை கணக்கை தொடங்கினார்.
இந்த தருணத்தில் மூன்றாவது வீரராக களமிறங்கிய திலக் வர்மா ஜான்சன் வீசிய பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் இந்திய அணி 5 ரன்கள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.