சென்சுரியன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் சதம் விளாசியது குறித்து இந்திய அணியின் திலக் வர்மா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். காயத்திற்கு மீண்டு வந்துள்ளதாக கூறிய அவர், இந்த தருணத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்ததாக கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்களை குவித்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி தரப்பில் சிறப்பாக ஆடிய நட்சத்திர இளம் வீரரான திலக் வர்மா 56 பந்துகளில் 7 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 107 ரன்களை விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

32 பந்துகளில் அரைசதத்தை கடந்த திலக் வர்மா, சதத்தை எட்டுவதற்கு வெறும் 19 பந்துகளை மட்டுமே எடுத்து கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசிய இளம் இந்திய வீரர்கள் பட்டியலில் திலக் வர்மா 2வது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலமாக இந்திய டி20 அணியில் முக்கியமான இடத்தை திலக் வர்மா பிடித்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ஏனென்றால் 2 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் திலக் வர்மாவுக்கு இதுவரை நிரந்தர இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சதம் விளாசிய மகிழ்ச்சியில் திலக் வர்மா பேசுகையில், இந்த தருணம் உணர்வுப்பூர்வமானது. ஏனென்றால் இப்படியொரு தருணத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன். காயத்தில் இருந்து மீண்டு வந்து சதம் விளாசியது அற்புதமாக உணர்வை கொடுக்கிறது.
இந்த பிட்சில் இரு பக்கமும் வெவ்வேறு வகையில் செயல்கிறது. ஒரே லெந்தில் பந்துகள் வீசப்பட்டாலும், பவுன்ஸ் மற்றும் வேகத்தில் மிகப்பெரிய மாற்றம் இருக்கிறது. அதனால் பேட்டிங் செய்ய தொடங்கிய போது கொஞ்சம் சவாலாக இருந்தது. ஆனால் சிறிது நேரம் பேட்டிங் ஆடிய பின் பந்தை எளிதாக கணித்து விளையாட முடிந்தது. ஒவ்வொரு முறையும் ஷாட்ஸ் விளையாடும் போது, சரியான ஷேப்பில் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன்.
நானும், அபிஷேக் சர்மாவும் நிச்சயம் அழுத்ததுடன் தான் விளையாடினோம். இன்றைய ஆட்டம் எங்கள் இருவருக்கும் முக்கியமானதாக இருந்தது. இந்திய அணியின் ஸ்பின்னர்கள் சிறப்பாக பவுலிங் செய்கிறார்கள். இந்த பிட்சில் 200 முதல் 210 ரன்கள் குவிக்க வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது. அதனை எட்டிவிட்டோம். நிச்சயம் டிஃபெண்ட் செய்வோம் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.