மும்பை: இந்தியா, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் தொடங்க உள்ளது இந்த தொடரில் கேப்டன் சுப்மன் கில்லும், துணை கேப்டன் காயம் காரணமாக இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த இரண்டு வீரர்களுமே முதல் ஒரு நாள் போட்டியில் சோபிக்க தவறினர். ஜெய்ஸ்வால் 18 ரன்களிலும், ருதுராஜ் 8 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஜெய்ஸ்வால், ருதுராஜ் ஆகியோர் இன்று கண்டிப்பாக ரன்கள் எடுக்க வேண்டும்.

நான் கெஞ்சி கேட்டுக் கொள்கின்றேன் என்று எப்படியாவது ரன்கள் சேர்த்து விடுங்கள். ஏனென்றால் ஒருவர் கேப்டன் ஆகவும், இன்னொருவர் துணை கேப்டன் ஆகவும் இருக்கிறார். அவர்களுடைய இடத்தில் தான் நீங்கள் விளையாடுகிறீர்கள். இந்த இரண்டு வீரர்களும் எவ்வளவு நாள் அணியை விட்டு விலகி இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
எனவே அவர்கள் மீண்டும் அணிக்கு வந்து விடுவார்கள். உங்களுக்கு மீண்டும் எப்போது ஒரு நாள் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்கும் என்றே தெரியாது. ஜெய்ஸ்வாலுக்கு இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரன்கள் குவிப்பது சிரமமாக இருக்கிறது. எனவே இன்று கிடைக்கும் வாய்ப்பு மிகவும் முக்கியமானது. அதேசமயம் ருதுராஜ் பேட்டிங் வரிசையில் நம்பர் நான்காவது இடத்தில் களம் இறங்க வைக்கப்படுகிறார்.
எனக்கென்னவோ அவர் ரன்கள் சேர்க்கக்கூடாது என்பதற்காக ஏதேனும் முயற்சி நடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஒவ்வொரு முறையும் இது போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு தரப்படும் போது, அவர்களுக்கு ஏற்ற இடத்தில் பேட்டிங் வரிசையில் வாய்ப்பு தரப்படுவதில்லை. ருதுராஜ், நான்காவது வீரராக களம் இறக்குகிறீர்கள்.
அவருடைய இடம் அது கிடையாது. ஆனால் இது அனைத்தையும் மீறி அவர் என்று ரன்கள் குவிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன். ஏனென்றால் அவருக்கும் இன்னும் ஒரு வாய்ப்பு தான் வழங்குவார்கள். நாம் எல்லாம் சொன்னோம் என்பதற்காக ராகுல் இன்று பேட்டிங் வரிசையில் ஐந்தாவது இடத்தில் களமிறங்குவார்கள் என்று நினைக்காதீர்கள்.
ராகுல், ஐந்தாவது இடத்தில் தான் களமிறங்க வேண்டும் என்று நாங்கள் சொல்கின்றோம். ஆனால் நீங்கள் அதைக் கேட்க மாட்டீர்கள். ஜெய்ஸ்வால் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று விளையாடினாலும், நீங்கள் ஒரு இடது கை பேட்ஸ்மேனுக்கு தான் நடுவரிசையில் வாய்ப்பு வழங்குவீர்கள்.
இதன் காரணமாக ராகுல் ஆறாவது இடத்தில் தான் விளையாடுவார். எனவே இன்றைய ஆட்டத்தில் எந்த ஒரு மாற்றமும் நிகழாது என்று நான் நினைக்கின்றேன். ஜடேஜா முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். இதேபோன்று ஹர்ஷித் ராணாவும் பந்துவீச்சில் கலக்கினார். இதனால் தான் இந்தியா வெற்றி பெற்றது என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.