கவுகாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஜெய்ஸ்வால் விக்கெட்டுக்கு பிறகு மோசமான சரிவை சந்தித்தது. சிறப்பாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட், ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்றிவிட்டது. பிட்ச்சில் பந்து திரும்பியதை பார்த்து ஜெய்ஸ்வால் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார்.
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து செய்தது. கே.எல். ராகுல் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த பிறகு, இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியை மீட்கும் பொறுப்பை ஏற்றார்.

தென்னாப்பிரிக்கப் பந்துவீச்சாளர்களை நேர்த்தியாக எதிர்கொண்ட அவர், இந்தத் தொடரில் அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 97 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 58 ரன்கள் எடுத்து களத்தில் நிலைத்து நின்றார்.
இந்திய அணி 95 ரன்கள் எடுத்திருந்த போது, 33-வது ஓவரைச் சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர் வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்து தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. ஹார்மர் வீசிய பந்து ஆஃப் ஸ்டம்ப் லைனில் பிட்ச் ஆகி, யாரும் எதிர்பார்க்காத வகையில் சட்டெனத் திரும்பியது . ஜெய்ஸ்வால் பின் காலில் நின்று தற்காப்பு ஆட்டம் ஆட முயன்றார். ஆனால் பந்து எதிர்பாராத விதமாக எழும்பி, பேட்டின் விளிம்பில் பட்டு மார்கோ யான்சனிடம் கேட்ச் ஆனது.
பந்து திரும்பிய விதத்தைப் பார்த்து ஜெய்ஸ்வால் அதிர்ச்சியில் உறைந்து போனார். 'அவுட்' ஆன பிறகு, விரக்தியுடனும் கோபத்துடனும் பிட்ச்-ஐயே சிறிது நேரம் முறைத்துப் பார்த்தார். நன்றாக செட்டில் ஆகியிருந்த பேட்ஸ்மேனை, பிட்ச் இப்படி ஏமாற்றியது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.
ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த பிறகு, இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசை சீட்டுக்கட்டு போலச் சரிந்தது. சாய் சுதர்சன் (15), துருவ் ஜூரல் (0), கேப்டன் ரிஷப் பண்ட் (7), நிதிஷ் குமார் ரெட்டி (10), ரவீந்திர ஜடேஜா (6) என அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன.
95/2 என்ற நிலையில் இருந்த இந்தியா, மளமளவென விக்கெட்டுகளை இழந்து 122/7 என்ற மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. ஜெய்ஸ்வாலின் அந்த ஒரு விக்கெட் விழாமல் இருந்திருந்தால், ஆட்டத்தின் போக்கு வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் 33* மற்றும் குல்தீப் யாதவ் 14* ஆகியோர் போராடி வருகின்றனர். தென்னாப்பிரிக்காவின் ஸ்கோரை விட இந்தியா இன்னும் 315 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய அணி 'பாலோ-ஆனை' தவிர்க்குமா என்பதே தற்போதைய பெரிய கேள்வியாக உள்ளது.