கட்டாக்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றிருக்கிறது. இதன் மூலம் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன் சேர்க்கப்படவில்லை. அதற்கு பதிலாக ஆஸ்திரேலியா தொடரில் இடம்பெற்ற ஜித்தேஷ் சர்மாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதன் மூலம் இந்திய அணி நிர்வாகம் நடுவரிசையில் ஒரு விக்கெட் கீப்பரை தான் தேடுகிறது என்பது தெளிவாகிவிட்டது. இந்த நிலையில் நேற்று ஜித்தேஷ் சர்மா பேட்டிங்கில் 5 பந்துகளை எதிர்கொண்டு 10 ரன்கள் சேர்த்தார். இதில் ஒரு சிக்ஸரும் அடங்கும். இதேபோன்று விக்கெட் கீப்பிங்கில் அவர் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
வேகபந்து வீச்சு, சுழற் பந்து வீச்சு என அனைத்தையுமே அபாரமாக அவர் விக்கெட் கீப்பிங் செய்தார். இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஜித்தேஷ் சர்மா நான்கு வீரர்களை விக்கெட் கீப்பராக ஆட்டம் இழக்க வைத்தார். இது டி20 கிரிக்கெட்டில் சாதனையாக பார்க்கப்படுகிறது.
ஒரே போட்டியில் அதிக வீரர்களை ஆட்டமிழக்க வைத்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் தோனி, தினேஷ் கார்த்திக் ஆகியோரின் சாதனையை ஜித்தேஷ் சர்மா சமன் செய்து இருக்கிறார். தோனி ஒரே போட்டியில் நான்கு வீரர்களை விக்கெட் கீப்பிங்கில் இதுவரை மூன்று முறை ஆட்டம் இழக்க வைத்திருக்கிறார். தினேஷ் கார்த்திக் ஒரு முறை ஒரே போட்டியில் நான்கு பேரை ஆட்டம் இழக்க வைத்திருக்கிறார்.
எனினும் இந்த பட்டியலில் தோனியே முதலிடத்தில் இருக்கிறார். தோனி ஒரே போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 2018 ஆம் ஆண்டு ஐந்து வீரர்களை ஆட்டமிழக்க வைத்தது, இந்திய அளவில் சாதனையாக பார்க்கப்படுகிறது. விக்கெட் கீப்பிங் பணியிலும் ஜிதேஷ் சர்மா சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு அடுத்தடுத்த போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் சஞ்சு சாம்சன் அணியில் இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.