சென்சுரியன்: தென்னாப்பிரிக்கா அணியின் ரபாடாவுக்கு, இந்திய அணியின் நட்சத்திர பும்ரா வீசிய பந்து ஸ்டம்பை தூக்கி சென்றது. இதனால் ஒரு நிமிடம் ரபாடா ஸ்டன்னாகி நின்ற சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் 101 ரன்கள் சேர்த்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது.

அந்த அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர் 140 ரன்களும், யான்சன் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன்பின் 3ஆம் நாள் ஆட்டத்தை தென்னாப்பிரிக்கா அணி 11 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கியது. இவர்கள் இருவரையும் பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் என்ன செய்வதென புரியாமல் தவித்தனர். டீன் எல்கர் 150 ரன்களையும், மார்கோ யான்சன் அரைசதத்தையும் கடந்தனர்.

இதனால் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னிலை 100 ரன்களை கடந்தது. இதன்பின் டீன் எல்கர் 185 ரன்கள் எடுத்து ஷர்துல் தாக்கூர் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கோட்சியே அதிரடியாக ஆடி 19 ரன்கள் சேர்த்த போது, அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் மார்கோ யான்சன் - ரபாடா கூட்டணி களமிறங்கியது. அப்போது அட்டாக்கில் பும்ரா கொண்டு வரப்பட்டார்.
அந்த ஓவரின் 5வது பந்தை பும்ரா, அரவுண்ட் தி ஸ்டம்ப் திசையில் இருந்து பும்ரா பந்துவீசினார். பும்ரா வீசிய அந்த பந்து ரபாடாவின் டிஃபென்ஸை ஏமாற்றி ஸ்டம்புகளை சிதறடித்து சென்றது. சில மீட்டர் தூரம் பறந்து ஸ்டம்ப் சென்று விழுந்த போது, ரபாடா ஒரு நிமிடம் பும்ராவையே பார்த்து கொண்டு நின்றார். பதிலுக்கு பும்ரா சிரிக்க, ரபாடாவும் சிரித்து கொண்டே பெவிலியன் நோக்கி நடந்து சென்றார்.
பும்ரா வீசிய அந்த பந்து அசாத்தியமாக இருந்ததை பார்க்க முடிந்தது. இதனை பேட்டிங் செய்த போது கவனித்து ரபாடா, சிரிப்பின் மூலமாக பும்ராவை பாராட்டியதை ரசிகர்கள் புரிந்து வரவேற்பு தெரிவித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.