
கேதார் ஜாதவ் நிலை
கேதார் ஜாதவ் கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணியில் சுழற் பந்துவீச்சு ஆல் - ரவுண்டராக இடம் பெறுவதும் பின் காயம் காரணமாக விலகுவதுமாக இருந்து வந்தார். இதன் இடையே அவரது பார்ம் மோசமானது. அதிரடி ஆட்டம் ஆடி வந்த அவர், திடீரென மந்தமான ஆட்டம் ஆட ஆரம்பித்தார்.

உலகக்கோப்பை சொதப்பல்
குறிப்பாக, 2019 உலகக்கோப்பை தொடரில் அவர் சில போட்டிகளில் ரன் குவித்தாலும் மிக நிதானமாக ரன் சேர்த்து அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதன் பின் அணியில் அவரது இடம் குறித்த கேள்வி எழுந்தது.

அணியில் இடம்
எனினும், உலகக்கோப்பை தொடருக்கு பின்னும் இந்திய ஒருநாள் அணியில் கேதார் ஜாதவ் தொடர்ந்து இடம் பெற்று வந்தார். தனக்கு கிடைத்த சில வாய்ப்புகளில் ஓரளவு ரன் குவித்தாலும், பந்துவீச்சில் பெரிதாக ஈர்க்கவில்லை.

கோலி எண்ணம்
கேப்டன் விராட் கோலி, ஆல் - ரவுண்டர் என்ற பெயரில் ஜாதவை அணியில் தேர்வு செய்தாலும் அவருக்கு பல போட்டிகளில் பந்து வீச வாய்ப்பு அளிக்கவில்லை. கிடைத்த சில வாய்ப்புகளிலும் ஜாதவ் விக்கெட் வீழ்த்தவில்லை. மார்ச் 2019 முதல் ஜாதவ் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம் பண்டியா
எனினும், கேதார் ஜாதவ் ஒருநாள் அணியில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார். அதற்கு முக்கிய காரணம், ஹர்திக் பண்டியா தான். பண்டியா காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்தார். அவர் வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் ஆவார்.

மீண்டு வந்த பண்டியா
வேறு சிறந்த ஆல் - ரவுண்டர் கிடைக்காத நிலையில் ஜாதவ் தொடர்ந்து அணியில் இடம் பெற்றார். இதனிடையே பண்டியா காயம் குணமாகி பயிற்சி பெற்று போட்டிகளில் ஆட தகுதி பெற்றார். அவர் அணிக்கு திரும்பும் வாய்ப்பும் கை கூடியது.

தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்
ஐபிஎல் தொடருக்கு முன் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து ஆட உள்ளது. அந்த தொடருக்கான அணித் தேர்வில் ஹர்திக் பண்டியா இந்திய அணியில் இடம் பெற்றார்.

ஜாதவ் நீக்கம்
அதே சமயம், கேதார் ஜாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஹர்திக் பண்டியா வரவை தீவிரமாக எதிர்பார்த்து காத்திருந்த கேப்டன் விராட் கோலி, ஜாதவ்வை நீக்க கோரி இருப்பார் என கூறப்படுகிறது. இது ஜாதவ்விற்கு பெரும் பின்னடைவாகும்.

ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு
ஜாதவ் நீக்கப்பட்டுள்ள நிலையில், அணியில் ஷுப்மன் கில் மாற்று வீரராக இடம் பெற்றுள்ளார். அவர் நியூசிலாந்து தொடரில் தொடர்ந்து மாற்று வீரராகவே இடம் பெற்று வந்தார். அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளார் கோலி.

இனி வாய்ப்பே இல்லை
இளம் வீரர்களை நோக்கி கேப்டன் கோலி திரும்பி உள்ள நிலையில், 34 வயதான கேதார் ஜாதவ் இனி இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பே இல்லை என்று கருதப்படுகிறது. டி20 உலகக்கோப்பையை ஒட்டியே இந்தியா தயார் ஆகி வருவதால் அவர் இனி ஐபிஎல் போட்டிகளிலும், உள்ளூர் போட்டிகளிலும் தான் ஆட வேண்டும்.


Click it and Unblock the Notifications











