நேரில் காண வந்தனர்
கேஷவ் மகாராஜின் தந்தை ஆத்மானந்த் மகாராஜ், தாய் காஞ்சன் மற்றும் அவரது வருங்கால மனைவி லாரிஷா ஆகியோர் இந்திய மண்ணில் கேஷவ் ஆடுவதை காண இந்தியா வந்துள்ளனர். அவர்கள் முதல் டெஸ்ட்டில் கேஷவ் ஆடுவதை நேரில் கண்டு களித்து வருகின்றனர்.
3 விக்கெட்கள்
கேஷவ் மகாராஜ் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும், தென்னாப்பிரிக்க அணியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் அவர் தான். 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.
பந்துவீச்சு எப்படி?
அவரது தந்தை ஆத்மானந்த் மகாராஜ் மைகேல் இணையதளத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அவர் கூறியவை இங்கே - "கேஷவ் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு அவர்கள் சொந்த மண்ணில் பந்து வீசினார் என்பதை கருத்தில் கொண்டு பார்த்தால், அவர் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்"
சிறந்த பந்துவீச்சாளராக வளர்வார்
"கேஷவ் முதன் முறையாக இதுபோன்ற சூழலில் பந்து வீசுகிறார். விரைவில் அவர் கற்றுக் கொண்டு சிறந்த பந்துவீச்சாளராக வளர்வார்" என்று தன் மகன் குறித்து நேர் மறையாக கூறினார் ஆத்மானந்த் மகாராஜ்.
கிரிக்கெட் பயணம்
கேஷவ்வின் கிரிக்கெட் பயணம் குறித்து அவர் கூறுகையில், "தென்னாப்பிரிக்க விளையாட்டு கவுன்சில் பெரிய அளவில் உதவியதால் என்னால் மாகாண கிரிக்கெட்டில் ஆட முடிந்தது. கேஷவ் அப்போது என்னுடன் மைதானத்துக்கு வருவார்"
ஆர்வம்
"கிரிக்கெட் மீது அவருக்கு அப்படி தான் ஆர்வம் பிறந்தது. ஆரம்பப் பள்ளி சிறுவர்களுக்கு உதவும் பேக்கர்ஸ் மினி கிரிக்கெட் நிகழ்வு மூலமாக அவர் கிரிக்கெட்டில் ஈடுபட்டு வந்தார்"
இடது கை சுழற் பந்துவீச்சு
"வீட்டின் பின்னே நிறைய கிரிக்கெட் ஆடுவோம். அப்போது தான் அவரது இடது கை சுழற் பந்துவீச்சு திறமை குறித்து கண்டறிந்தேன். தென்னாப்பிரிக்க அணியில் பால் ஹேரிஸ், நிக்கி போயே தவிர்த்து நல்ல இடது கை சுழற் பந்துவீச்சாளர்கள் இல்லை என்பது அவருக்கு உதவியது. அந்த இடைவெளியில் அவர் தேசிய அணிக்குள் நுழைந்தார்"
த்ரில் அழைப்பு
"என்னால் பல காரணங்களால் தென்னாப்பிரிக்க அணியில் ஆட முடியாமல் போனது. ஆனால், கேஷவ் மகாராஜ்-க்கு (தென்னாப்பிரிக்க அணியில்) அழைப்பு வந்த போது நாங்கள் த்ரில் ஆகி விட்டோம்"
கனவு
"நான் தென்னாப்பிரிக்க அணிக்கு ஆட வேண்டும் என கனவு கண்டேன். என்னால் அது முடியவில்லை. ஆனால், கேஷவ் மகாராஜ் மூலமாக அந்த கனவு நிறைவேறியது"
கற்றுக் கொள்ள வேண்டும்
"அவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆடத் துவங்கி 3 ஆண்டுகள் தான் ஆகிறது. அவர் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். இன்னும் நிறைய தூரம் போக வேண்டும். அவர் சரியான பாதையில் தான் செல்கிறார் என நான் நினைக்கிறேன்" இவ்வாறு கூறினார் ஆத்மானந்த் மகாராஜ்.