For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA: இந்திய அணியை எச்சரித்த தென்னாப்பிரிக்க வீரர் கேஷவ் மகராஜ்.. முதல் டெஸ்ட்டுக்கு முன் சவால்

கொல்கத்தா: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாகப் பேசிய தென்னாப்பிரிக்காவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகராஜ், "இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் என்ற உண்மையான பசியும், தாகமும் எங்கள் அணிக்குள் அதிகமாக இருக்கிறது," என்று கூறி இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நவம்பர் 14-ம் தேதி தொடங்கும் இந்தத் தொடர், தென்னாப்பிரிக்காவுக்கு மிகவும் சவாலானது என்பதை ஒப்புக்கொண்ட கேசவ் மகராஜ், இதுகுறித்து மேலும் கூறியதாவது:

"தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நாட்காட்டியில், பல தலைமுறைகளாக இந்தியாவுக்கு எதிரான தொடர் தான் மிகவும் கடினமான சுற்றுப்பயணமாக, இல்லையென்றால் மிகக் கடுமையான ஒன்றாக இருந்து வருகிறது. இதை நாங்கள் எங்களின் மிகப்பெரிய சோதனைகளில் ஒன்றாகக் கருதுகிறோம். எங்களை நாங்களே தரப்படுத்திக் கொள்ளவும், நாங்கள் எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறோம் என்பதைப் பார்க்கவும் இது ஒரு அருமையான வாய்ப்பு.

IND vs SA Keshav Maharaj warns Indian team ahead of first test between India and South Africa at Kolkata

துணைக்கண்டத்தின் மற்ற சில பகுதிகளை நாங்கள் வெல்லத் தொடங்கிவிட்டோம். இப்போது, இந்தியாவை வீழ்த்துவது நாங்கள் உண்மையாகவே முடிக்க விரும்பும் ஒரு முக்கியமான அத்தியாயம்" என்று மகராஜ் தெரிவித்தார்.

சமீபத்திய ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அணிகளில் ஒன்றாகத் தென்னாப்பிரிக்கா இருந்தாலும், 2015 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவர்களால் தொடரை வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற தொடரில், சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி, முதல் போட்டியில் தோற்ற தென்னாப்பிரிக்கா தொடரைச் சமன் செய்ய உதவினர். ஆனால், இந்தியாவில் அதுபோன்ற முழு சுழலுக்குச் சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்படும் எனத் தான் எதிர்பார்க்கவில்லை என்று மகராஜ் குறிப்பிட்டார்.

"பாகிஸ்தானில் நாங்கள் எதிர்கொண்டது போன்ற சுழல் ஆடுகளங்கள் இங்கு இருக்கும் என நான் நினைக்கவில்லை. போட்டி செல்லச் செல்ல மெதுவாகத் தேய்மானம் அடையும் நல்ல, பாரம்பரிய டெஸ்ட் ஆடுகளங்களாகவே இருக்கும் என நம்புகிறேன். சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த தொடரைக் கவனித்தாலே தெரியும், ஆடுகளங்கள் நான்கு மற்றும் ஐந்தாவது நாள் வரை போட்டிக்கு உகந்ததாக இருந்தன. எனவே, நல்ல கிரிக்கெட் ஆடுகளங்களையே இந்திய அணி விரும்பும் என நினைக்கிறேன். இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் என்ற உண்மையான பசியும், தாகமும் எங்கள் அணிக்குள் அதிகமாக இருக்கிறது" என்றார்.

கடந்த காலங்களில், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சுழல் ஆடுகளங்களில் ஆதிக்கம் செலுத்தித் தென்னாப்பிரிக்காவைத் திணறடித்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியின் உத்வேகத்துடன் இந்தியத் தொடரை அணுகுவோம் என்று மகராஜ் கூறினார். "பாகிஸ்தானில் பெற்ற அந்த வெற்றியின் உத்வேகத்தை நாங்கள் இங்கு கொண்டு வந்துள்ளோம். டாஸ் வென்றாலும், தோற்றாலும் நாங்கள் போராடி வெற்றியை எங்கள் பக்கம் திருப்புவோம் என்பதை அங்கு காட்டினோம். எங்கள் அணியின் அணுகுமுறையில் ஒரு தெளிவான துல்லியம் இருக்கிறது," என்றார்.

Story first published: Wednesday, November 12, 2025, 13:31 [IST]
Other articles published on Nov 12, 2025
English summary
IND vs SA: Keshav Maharaj warns Indian team ahead of first test between India and South Africa at Kolkata
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+