மும்பை: இந்திய அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட சுப்மன் கில் காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் வெளியேறினார். கில் தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி கடைசி போட்டியில் மட்டும் வெற்றியை பெற்றது.
அப்போதே பலரும் ஒரு நாள் கேப்டனுக்கு இன்னும் தகுதியான ஆள் கிடையாது என்றும் ராகுலை கேப்டனாக நியமித்திருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த தருணத்தில் கில், காயம் காரணமாக வெளியேறிய நிலையில் கேப்டனாக ராகுல் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

33 வயதான ராகுல் இந்திய அணியை பல தொடர்களில் கேப்டனாக வழிநடத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் ராகுலை தான் பிசிசிஐ எதிர்கால கேப்டனாக அடையாளப்படுத்தியது. ஆனால் ஏன் இந்த திடீர் மாற்றம் நிகழ்ந்தது என்று யாருக்குமே தெரியாது. இந்த சூழலில் ராகுலின் ஒருநாள் கேப்டன்ஷி ரெகார்ட் எவ்வாறு இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.
ராகுல் முதல் முதலாக தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தான் ஒரு நாள் கேப்டனாக 2022ஆம் ஆண்டு அறிமுகமானார். தென்னாப்பிரிக்கா மண்ணில் நடைபெற்ற இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடர் ராகுலுக்கு மிகவும் மோசமாக அமைந்தது. இந்த மூன்று போட்டிகளிலும் இந்தியா தோல்வியை தழுவியது. எனினும் அதன் பின் ஜிம்பாப்வேக்கு எதிராக அவர்கள் சொந்த மண்ணில் இந்தியா மூன்று ஒரு நாள் போட்டிகளில் ராகுல் தலைமையில் விளையாடியது.
இதில் மூன்றிலுமே இந்தியா வெற்றி பெற்றது. இதனை அடுத்து உலகக் கோப்பை தொடருக்கு முன்பு ஆஸ்திரேலியாவை இந்தியா அணி தங்களது சொந்த மண்ணில் மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ராகுல் தான் கேப்டனாக செயல்பட்டார். இந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற மூன்றாவது போட்டியில் ரோஹித் சர்மா வந்த பிறகு இந்தியா தோற்றது.
இதை அடுத்து 2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா மண்ணில் மீண்டும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் ராகுல் தலைமையில் இந்தியா விளையாடியது. இம்முறை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்று 2022 ஆம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது. அதேபோன்று கேப்டனாகவும் ராகுல் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார்.
இதுவரை 12 போட்டிகளில் தலைமை தாங்கி 10 இன்னிங்ஸில் மொத்தமாக 302 ரன்கள் ராகுல் அடித்து இருக்கிறார். இதில் அவருடைய சராசரி 33 என்ற அளவில் உள்ளது. 4 அரை சதமும் அடங்கும். அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 58 ரன்கள் அடித்து இருக்கின்றார். ராகுல் இதுவரை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 8 போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 187 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.
இதில் அவருடைய சராசரி 26 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 70 என்ற அளவில் இருக்கின்றது. இந்த ரெக்கார்டை நிச்சயமாக மாற்றும் முயற்சியில் ராகுல் ஈடுபடுவார். ஒருவேளை ராகுல் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டால் அவரே ஒருநாள் அணியின் கேப்டனாக தொடரவும் வாய்ப்பிருக்கின்றது. இதனால் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.