டர்பன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியின் கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரோகித் சர்மா பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்காக 3 அணிகள் பிசிசிஐ தரப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பயிற்சி போட்டிக்காக சீனியர் மற்றும் ஜூனியர் வீரர்கள் பலரும் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர். மொத்தமாக 45க்கும் அதிகமான வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் மொத்தமாக தென்னாப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். அதேபோல் 3 அணிகளுக்கும் 3 கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் பலரும் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சியை தொடங்கியிருந்தார். இந்த நிலையில் மும்பை மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளார்.
அதேபோல் உலகக்கோப்பை தொடருக்கு பின் தனது குழந்தையுடன் நேரம் செலவிட்டு வந்த நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளார். மும்பையில் உள்ள மைதானத்தில் ஈடுபட்டு வந்த கேஎல் ராகுலுடன் பும்ராவும் இணைந்து கொண்டார். கேஎல் ராகுல் பேட்டிங் செய்ய, பும்ரா பவுலிங் செய்ய என்று இந்திய அணி வீரர்களின் பயிற்சி களைகட்டியது.
அதேபோல் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு பின், கேப்டன் ரோகித் சர்மா குடும்பத்தினருடன் லண்டனுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அதன்பின் 3 நாட்களுக்கு முன் இந்தியா வந்த ரோகித் சர்மா, தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். சீனியர் வீரர்கள் அனைவரும் பயிற்சிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களிடையே கூடுதல் ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்காவில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.