விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் தொடரையும் வென்று இருக்கிறது. இதன் மூலம் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற 11 இருதரப்பு தொடரில் 10 ஒரு நாள் தொடரை வென்று அசத்தியிருக்கிறது.
மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ராகுல், நான் டாஸ் வென்ற பிறகு என் அணி வீரர்கள் என்னை மிகவும் பெருமையாக பார்த்தார்கள். அதற்கு முன்பு யாரும் இப்படி என்னை பார்த்தது கிடையாது.

முதல் இரண்டு போட்டிகளில் நாங்கள் கடுமையான சூழலில் விளையாடி தோல்வியை தழுவினோம். தற்போது எங்களுடைய பவுலர்களுக்கு ஏதுவான சூழலை வழங்கினோம். இன்று ஆடுகளம் நன்றாக இருந்தது. எங்களுடைய பவுலர்கள் கொத்தாக விக்கெட்களை எடுத்தார்கள்.தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கில் அதிரடியை காட்டும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும்.
இதனால் 400 ரன்களை கூட நாம் துரத்த நேரலாம், இல்லையென்றால் அந்த அணி வீரர்கள் தொடர்ந்து பெரிய ஷாட்களை ஆடி விக்கெட்டுகளை இழந்து விடுவார்கள் என்று யோசித்தோம். பிரசித் கிருஷ்ணா முக்கியமான கட்டத்தில் இரண்டு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்படி தான் ஒரு நாள் கிரிக்கெட்டில் எதிரணி ஸ்கோரை நாம் கட்டுப்படுத்த வேண்டும்.
டி காக் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார். அவர் அடித்த வேகத்தை பார்த்தால் நிச்சயம் 180 ரன்களுக்கு மேல் அடித்து இருப்பார். அவருடைய விக்கெட் ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் மூலம் புதிய பேட்ஸ்மேன்கள் களத்திற்கு வந்த போது கடுமையாக தடுமாறினார்கள்.
இந்த தொடரில்ழ் என் மனதுக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால் நாங்கள் அழுத்தத்தை சிறப்பாக கையாண்டோம். தென்னாப்பிரிக்க பேட்டர்கள் மூன்று போட்டிகளிலும் எங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். அதில் ஒரு போட்டி எங்களுக்கு சாதகமாக மாறவில்லை. எனினும் அதைப்பற்றி நாங்கள் பெரிய அளவு யோசிக்கவில்லை.எங்களுடைய திட்டத்தையும், எங்களுடைய செயல்முறையும் ஒரே மாதிரி தான் வைத்து இருக்கின்றோம். ஒரே விஷயத்தை இன்று திரும்பி செய்தோம். அது எங்களுக்கு வெற்றியை தந்திருக்கின்றது என கேப்டன் ராகுல் கூறியுள்ளார்.