ராஞ்சி: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில், காயத்தால் விலகிய ஸ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக, ரிஷப் பன்ட் நடுவரிசையில் களமிறங்குவார் என இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தற்காலிக கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் 4வது இடத்தில் ஒரு பெரிய வெற்றிடம் நிலவுகிறது. பல வீரர்கள் இந்த இடத்தைப் பிடிக்க ஆர்வமாக உள்ளனர்.
விபத்திற்குப் பிறகு ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள ரிஷப் பன்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறார். அவர் அணியில் இருந்தாலும், கே.எல். ராகுல் முதல் நிலை விக்கெட் கீப்பராக இருப்பதால், பன்ட்டிற்கு விளையாடும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும், 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலும் ரிஷப் பன்ட் பெஞ்சிலேயே இருந்தார். 5வது இடத்தில் இடது கை பேட்ஸ்மேனாக அக்சர் படேல் களமிறங்கி, பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டது பன்ட்டிற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.
தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் இல்லாததால், திலக் வர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்களுக்கு நடுவே ரிஷப் பன்ட்டிற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த "ரிஷப் ஒரு பேட்ஸ்மேனாகவே விளையாட போதுமான திறமை கொண்டவர். ஆனால் நாளை பார்ப்போம். அவர் விளையாடினால் விக்கெட் கீப்பிங் செய்வார். அதையும் நாளைதான் பார்ப்போம். ருதுராஜ் கெய்க்வாட் ஒரு சிறந்த வீரர். எங்கள் ஒருநாள் அணியின் முதல் 5-6 வரிசை மிகவும் நிலையானது."
"ஆனால் அவருக்குக் கிடைத்த குறைந்த வாய்ப்புகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இந்தத் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்க ஆவலுடன் காத்திருக்கிறோம். நான் 6வது இடத்திலேயே பேட்டிங் செய்வேன், அங்குதான் நான் விளையாடி வருகிறேன்."
"ஒருநாள் அணி அறிவிப்பு வருவதற்கு முந்தைய நாள், நான் தலைமை தாங்கலாம் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நான் கடந்த காலத்திலும் இதைச் செய்துள்ளேன். பொறுப்பை நான் எப்போதும் ரசித்துள்ளேன். ரோஹித், விராட், ஜடேஜா போன்றோருடன் சேர்ந்து பெரிய இலக்கை அடைய ஒரு கூட்டு முயற்சியுடன் செயல்படுவோம்," என்று கேப்டன் ராகுல் கூறினார்.
கேஎல் ராகுல் இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ளார். அதில் ஆறு போட்டிகள் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக விளையாடப்பட்டுள்ளன. கேப்டனாக அறிமுகமான தொடரில் 0-3 என்ற கணக்கில் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் அதன் பிறகு ஒன்பது போட்டிகளில் ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளார்.இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 30 ஞாயிற்றுக்கிழமை ராஞ்சியில் நடைபெறவுள்ளது.