டாஸ் வெற்றி
இந்தப் போட்டியில் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம், போட்டி நடந்த பெங்களூரு ஆடுகளம், சேஸிங் செய்ய சாதகமான ஆடுகளம் ஆகும். ஆனால், கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
டாஸ் முடிவு சரியா?
கோலி எடுத்த இந்த டாஸ் முடிவு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. டி20 தொடரை வெல்ல இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில், கோலி ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்ற பேச்சு கிளம்பியது.
விளக்கம் சொன்ன கோலி
டாஸ் முடிவை கூறிய போதே தான் ஏன் பேட்டிங் தேர்வு செய்தேன் என்பது பற்றி கூறினார் கோலி. டி20 உலகக்கோப்பைக்கு இளம் இந்திய வீரர்களை தயார் செய்யும் வகையில் இந்த முடிவை எடுத்ததாக கூறினார். கடினமான சூழ்நிலையில் என்ன செய்வது என்பதை இந்திய வீரர்கள் தெரிந்து கொள்வார்கள் என்றார்.
போட்டியில் என்ன நடந்தது?
ஆஹா.. கோலி தைரியமாக முடிவு எடுத்து இருக்கிறார் என அதை சிலர் பாராட்டினர். எனினும், போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் சரிந்தது. 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்தியா.
பரிசோதனை தோல்வி
ஒன்பது பேட்ஸ்மேன்களை வைத்து இருந்தும், சேஸிங் பிட்ச்சில், முதலில் பேட்டிங் செய்ய முடியாமல் திணறி தன் பரிசோதனை திட்டத்தில் தோல்வி அடைந்தது இந்திய அணி. இந்த தோல்வியால் வெல்ல வேண்டிய தொடரை இந்தியா சமன் செய்தது.
கோலி சொன்னது என்ன?
போட்டிக்குப் பின் கோலி தன் திட்டம் தவறாக சென்று விட்டது என கூறப் போகிறார் என எதிர்பார்த்த நிலையில், இந்த திட்டம் தான் சரி என்பது போல பேசினார். வீரர்களை குறை சொல்லாத கோலி, டி20 உலகக்கோப்பை வரை இதே போலத் தான் செயல்படுவோம். இதே திட்டத்தில் தான் ஆடுவோம் என குறிப்பிட்டார்.
ரசிகர்கள் வெறுப்பு
தோல்வி அடைந்த திட்டத்தை காட்டி, இது தான் இனி எங்கள் திட்டம், இதன் மூலம் வீரர்கள் பயிற்சி பெறுவார்கள் என கோலி கூறி இருப்பது விமர்சகர்கள் மத்தியில் பெரும் வியப்பையும், ரசிகர்கள் மத்தியில் வெறுப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சரியான முடிவா?
கோலி கூறுவதை வைத்துப் பார்த்தால், இந்திய அணி டி20 போட்டிகளில் இனி டாஸ் வென்றால் பேட்டிங் தான் தேர்வு செய்யும் என தெரிகிறது. ஆடுகளம் எப்படி இருந்தாலும் பேட்டிங் தேர்வு செய்வது சரியான முடிவாக இருக்குமா?
உலகக்கோப்பை அரையிறுதி
அதே போல, வீரர்களுக்கு சேஸிங் பயிற்சியே தேவை இல்லையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 50 ஓவர் உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணி சேஸிங் செய்யும் போது தான் தோல்வி அடைந்தது.
எழும் கேள்விகள்
அப்படி இருக்க டி20 போட்டிகளில் நாங்கள் சிறந்த சேஸிங் அணி, அதனால் முதலில் பேட்டிங் செய்வதில் கவனம் செலுத்த உள்ளோம் என கோலி கூறி இருப்பது சரியா? அணியை, வீரர்களை இது பாதிக்காதா?