இந்தியா தோல்வி
அதை அடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 16.5 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவின் பேட்டிங்கின் போது அணியில் ஒரு குழப்பம் ஏற்பட்டது.
அந்த சம்பவம்
ரோஹித் சர்மா, தவான் ஆட்டமிழந்த பின், 2 விக்கெட்கள் இழந்த நிலையில், நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய அடுத்த பேட்ஸ்மேன் வர வேண்டும். ஒருநாள் போட்டிகளில் நான்காம் வரிசையில் இறங்கும் ஸ்ரேயாஸ் ஐயர் இறங்குவாரா?
இருவரும் வந்தனர்
அல்லது இரண்டாம் டி20யில் நான்காம் வரிசையில் களமிறங்கிய பண்ட் களமிறங்குவாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்த போது இருவரும் பேட்டை எடுத்துக் கொண்டு களமிறங்க வந்தனர். பின், ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் உள்ளே சென்றார். பண்ட் களமிறங்கினார்.
ரசிகர்கள் கேள்வி
இதைப் பார்த்த ரசிகர்கள் ஏன் இருவரும் ஒரே நேரத்தில் பேட்டிங் செய்ய வந்தார்கள் என கேள்வி எழுப்பி வந்தனர். வீரர்கள் இடையே நடந்த குழப்பமா? அல்லது அணியில் இருக்கும் குழப்பமா? என கேட்டனர்.
கேப்டன் அளித்த விளக்கம்
போட்டிக்குப் பின் இது குறித்து கேப்டன் விராட் கோலியிடம் கேட்கப்பட்டது. அவர் கூறுகையில், "தவறான தகவல் பரிமாற்றம் இருக்கும் என நினைக்கிறேன். பின்னர் அப்படித் தான் தெரிந்து கொண்டேன்" என்றார்.
நகைச்சுவை
"பேட்டிங் பயிற்சியாளர் அவர்கள் இருவரிடமும் பேசினார். அப்போது யார் அந்த இடத்தில் பேட்டிங் இறங்குவது என்பதில் தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் களமிறங்க வந்திருந்தால் அது நகைச்சுவையாக இருந்திருக்கும். களத்தில் மூன்று பேட்ஸ்மேன்கள் இருந்திருப்பார்கள்" என்றார் கோலி.
என்ன திட்டம்?
உண்மையில் யார் களமிறங்க வேண்டும்? அணியின் திட்டம் என்ன? என கோலியிடம் கேட்ட போது 10 ஓவர்களுக்குள் 2 விக்கெட் விழுந்து விட்டால் ஸ்ரேயாஸ் ஐயரும், 10 ஓவருக்கு மேல் என்றால் ரிஷப் பண்ட்டும் பேட்டிங் செய்ய வர வேண்டும் என திட்டமிட்டதாக கூறினார்.
ஆனால் நடந்தது என்ன?
ஆனால், எட்டாவது ஓவரிலேயே இரண்டு விக்கெட்களை இழந்தது இந்திய அணி. அந்த சூழ்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் தான் இறங்கி இருக்க வேண்டும். ஆனால், ரிஷப் பண்ட் தான் பேட்டிங் செய்ய வந்தார். அணியில் எதுவும் திட்டமிட்டது போல நடக்கவில்லை என்பதை தான் இது காட்டுகிறது.
என்னங்க நடக்குது?
விராத் கோலி அளித்த விளக்கத்தில் இதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்வது போல தான் பேசினார். ஆனால், உற்றுப் பார்த்தால் சில அணியில் இருக்கும் குளறுபடிகள் தெளிவாக புரிகிறது.
புரிதல் இல்லை
அணியின் திட்டங்கள் குறித்து வீரர்களுக்கு சரியான புரிதல் இல்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது. மேலும், அதை ஒரு நகைச்சுவை போல கேப்டன் குறிப்பிடுவது அதிர்ச்சியாகவும் உள்ளது.