கூடுதல் பந்துவீச்சாளர்
அதற்கு காரணம், இந்திய அணியின் அணித் தேர்வில் கோலி செய்த ஒரு தவறு தான் என விவாதிக்கப்பட்டு வருகிறது, குறிப்பிட்ட ஆல் - ரவுண்டர் ஒருவருக்கு பதிலாக கூடுதல் பந்துவீச்சாளரை ஆட வைத்து இருந்தால் அது மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
ஆடுகளம் எப்படி?
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் நடைபெறும் விசாகப்பட்டினம் மைதானம் இரண்டாம் நாள் முதல் சுழற் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என கூறப்பட்டது. முதல் நாள் மட்டுமே பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும்.
தென்னாப்பிரிக்க முடிவு
இதை உணர்ந்த தென்னாப்பிரிக்க அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை அணியில் ஆட வைத்தது. அந்த மூவரில் செனுரான் முத்துசாமி அறிமுக வீரர். பீடிட் அனுபவம் குறைந்த வீரர். அவர்களை எளிதாக சமாளித்த இந்திய அணி 502 ரன்கள் குவித்தது.
இந்திய அணியின் பந்துவீச்சு
அடுத்து தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்ய வந்தது. துவக்கத்தில் இந்தியா சிறப்பாக செயல்பட்டது. அஸ்வின் - ஜடேஜா அனுபவ சுழற் பந்து வீச்சு கூட்டணி முதல் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை வீழ்த்தி நம்பிக்கை அளித்தது,
தென்னாப்பிரிக்கா தாக்குதல்
அதன் பின் தென்னாப்பிரிக்கா அணி தாக்குதல் நடத்தத் துவங்கியது. சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களை குறி பார்த்து அடித்து ஆடினர் தென்னாப்பிரிக்க கேப்டன் டு ப்ளேசிஸ் மற்றும் டி காக். மறுபுறம் எல்கர் அவ்வப்போது பவுண்டரிகளாக அடித்து சதம் கடந்தார்.
எழுச்சி பெற்ற தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்கா பாலோ ஆன் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்து ஆடி 431 ரன்கள் குவித்தது அந்த அணி. பாலோ ஆன் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்கா வெறும் 71 ரன்கள் மட்டுமே பின்தங்கி இந்திய அணிக்கு சவால் விட்டது.
தடுமாற காரணம் என்ன?
இந்தியா முதல் இன்னிங்க்ஸ் பவுலிங்கில் தடுமாற முக்கிய காரணம், பந்துவீச்சாளர்கள் தேர்வு தான். வேகப் பந்துவீச்சாளர்களான இஷாந்த் சர்மா மற்றும் ஷமியால் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஹனுமா விஹாரி என்ன செய்தார்?
அஸ்வின், ஜடேஜா மட்டுமே மூன்றில் இரண்டு பங்கு ஓவர்களை, சுமார் 86 ஓவர்களை வீசினர். பகுதி நேர சுழற் பந்துவீச்சாளராக அணியில் சேர்க்கப்பட்ட ஹனுமா விஹாரி 9 ஓவர்கள் மட்டுமே வீசினார்.
பழகிய பந்துவீச்சு
அவர் பந்துவீச்சை தென்னாப்பிரிக்க வீரர்கள் அடித்து ஆடியதால் கோலி அவருக்கு அதிக ஓவர்கள் அளிக்கவில்லை. அது தான் சிக்கலாக மாறியது. அஸ்வின், ஜடேஜா மட்டுமே மாற்றி, மாற்றி பந்து வீசியதால் தென்னாப்பிரிக்க வீரர்கள் எளிதாக சமாளித்து ஆடினர்.
மாற்றம் ஏற்பட்டு இருக்கும்
கூடுதலாக ஐந்தாவது பந்துவீச்சாளர் இருந்திருந்தால், இந்திய அணி இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி இருக்கலாம். ஆல் - ரவுண்டர் ஹனுமா விஹாரிக்கு பதில் தென்னாப்பிரிக்க அணியைப் போல இந்தியா மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ்வை களமிறக்கி இருக்கலாம்.
கோட்டை விட்டார் கோலி
ஜடேஜா, அஸ்வின் இருவரும் ஓரளவு பேட்டிங் செய்வார்கள் என்பதால், இந்த மாற்றத்தால் பேட்டிங்கில் அணிக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. கேப்டன் கோலி பந்துவீச்சாளர்கள் தேர்வில் கோட்டை விட்டு விட்டார் என சில விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.